கைதடி மற்றும் நாவற்குழி பகுதிகளில் இருவேறு விபத்துக்கள்
ஏ9 வீதி கைதடி மற்றும் நாவற்குழி பகுதிகளில் இன்றையதினம் இருவேறு விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் காரைநகர் சாலைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று கட்டுப்பாட்டையிழந்து பிரதான வீதியைவிட்டு விலகி சென்றுள்ளது. இச்சம்பவம் கைதடி பாலத்துக்கும் – பிள்ளையார் கோயிலுக்கும் இடையில் ஏ-9 வீதியில் இன்று பிற்பகல் 1.45 மணியளவில் இடம்பெற்றது.
“காரைநகர் சாலைக்குச் சொந்தமான பேருந்து ஏ-9 கண்டி வீதியூடாக யாழ்ப்பாணத்துக்கு பயணித்துள்ளது. கைதடிப் பாலத்தைக் கடக்கும் போது வேகக் கட்டுப்பாட்டையிழந்த பேருந்து வீதியைவிட்டு விலகிச் சென்றுள்ளது. பேருந்து தடுமாறிப் பயணித்ததால் எதிரே பயணித்த வாகனங்கள் சடுதியாக பிறேக் செய்ததால் பின்னே சென்ற டிப்பர் வீதியிலிருந்து விலக முற்பட்ட போதும் சாரதியால் கட்டுப்படுத்தப்பட்டது.
கடும் மழை பொழிந்து கொண்டிருந்த நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இதேவேளை கடும் மழை பெய்த வேளை வேகமாக வந்த கப் ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நாவற்குழி பாலத்தின் இரும்பு கம்பியில் மோதி விபத்துக்குள்ளானதில் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றது.
சம்பவத்தில் வாகனத்தின் முன் பக்கம் அதிக பலத்த சேதம் அடைந்துள்ளது.










