இளம் யுவதியின் உயிரை பறித்த பேருந்து விபத்து..!
துரதிஷ்டவசமாக கொழும்பு - கண்டி செல்லும் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.
கந்தானை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ரசாஞ்சலி என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.
இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் தனது காதலனுடன் குறித்த யுவதி உந்துருளியில் (ஸ்கூட்டர்) பயணம் செய்து திரும்பும் போது இந்த துரதிர்ஷ்டவசமான விபத்தை சந்தித்துள்ளார்.
சம்பவம்

இவர்கள் இருவரும் நேற்று வரகாபொல உடுவக்க நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்றுள்ளனர். பின்னர் வீடு திரும்பும் போது முந்திரி வாங்குவதற்காக தனது உந்துருளியை கொழும்பில் இருந்து கண்டி செல்லும் பிரதான வீதியில் பட்டலிய கஜுகம என்ற இடத்தில் வீதியின் ஓரத்தில் நிறுத்தியுள்ளார்.
குறித்த பெண் உந்துருளி அருகே இருந்த போது, காதலன் முந்திரி கடைக்கு சென்றுள்ளார். அப்போது, அதிவேகமாக கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று உந்துருளி அருகில் நின்றிருந்த இளம்பெண்ணை மோதிய நிலையில் பேருந்து அருகில் இருந்த வடிகாலில் விழுந்து நின்றுள்ளது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த யுவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
குறித்த பேருந்து இராணுவத்திற்கு வாடகைக்கு விடப்பட்டதுடன் அதன் சாரதி காவத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.