பதவியேற்ற முதல் நாளிலேயே ரணில் விதித்த தடை! இரத்து செய்யப்படும் கொடி
அதிபரை குறிப்பிடும் போது அதிமேதகு என்ற அடைமொழி பயன்படுத்தப்படுவதை உத்தியோகபூர்வமாக தடை செய்வதாக பதில் அதிபர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டுக்கு தேசியக்கொடி மட்டும் போதும் அதிபர் கொடியையும் இரத்து செய்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
பதில் அதிபராக பொறுப்பேற்ற பின்னர் நாட்டு மக்களுக்கு வழங்கிய விசேட அறிவிப்பிலேயே ரணில் விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்களுக்காகவே பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்
தொடர்ந்து கருத்துரைத்த அவர், " நாட்டையும் மக்களையும் மனதில் கொண்டே இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். முதலில் நாட்டை மீட்போம். அதன் பிறகு அரசியல் செய்வோம்.
நான் எப்போதும் ஜனநாயக ரீதியில் செயற்படுகிறேன். அரசியலமைப்பின்படி செயல்படும் நான் அதற்கு புறம்பாக ஒருபோதும் செயல்படமாட்டேன்.
நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்தால் மக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். போராடும் உரிமை உள்ளது ஆனால் வன்முறையை அனுமதிக்க முடியாது.
போராட்டக்காரர்களுக்கும், கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. போராட்டக்காரர்கள் சட்டத்தின் பிரகாரம் செயற்படுபவர்கள்.
19 ஆவது திருத்தம்
19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான பின்னணியை இந்த சில நாட்களில் செய்து தரப்படும்.
ஆகவே அடுத்த வாரம் தெரிவாகும் புதிய அதிபருக்கு '19' ஐ விரைவில் முன்வைக்க கூடியதாக இருக்கும்.
உணவு, எரிபொருள், எரிவாயு, மின்சாரம் வழங்குவது கடினம். எனவே, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டும்.