முல்லைத்தீவில் போதைப்பொருள் பாவனையை ஒழிக்க நடவடிக்கை
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட சிலாவத்தை கிராம அலுவலர் பிரிவுக்குட்ப்பட்ட பகுதியில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த கிராம அமைப்புக்கள் ஒன்றுதிரண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
சிலாவத்தை கிராமத்தில் போதைப்பொருள் பாவனையினால் ஏற்ப்படும் விளைவுகள், பாதிப்புக்கள் தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்புக்களின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்பதை உணர்ந்த கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் கிராம அலுவலர் தலைமையில் முல்லைத்தீவு தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரி W.B.M.A அமரசிங்கவின் உதவியுடன் கிராமத்தில் சிவில் பாதுகாப்பு குழு ஒன்றை அமைத்து போதைப்பொருள் பாவனையை தடுக்க நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
கிராம அபிவிருத்தி சங்கம், மாதர் கிராம அபிவிருத்தி சங்கம், விளையாட்டு கழகம் உள்ளிட்ட கிராம மட்டத்தில் உள்ள அமைப்புக்கள் மற்றும் கிராம மக்கள் மற்றும் இளைஞர்களை உள்ளடக்கி சிவில் பாதுகாப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
கசிப்பு விற்பனை
இந்த சிவில் பாதுகாப்பு குழு தமது கிராமத்தில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றவர்களை கண்டறிந்து காவல்துறையினரை அழைத்து அவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கைகளுக்கு உட்ப்படுத்தும் செயற்ப்பாட்டை முன்னெடுத்துள்ளனர்.

இந்தநிலையில் சிலாவத்தை கிராமத்தின் தீர்த்தக்கரை பகுதியில் அதிகமாக கசிப்பு விற்பனை இடம்பெற்றுவரும் நிலையில் அவ்வாறு கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் அதிகளவான கசிப்புடன் கைது செய்யப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதேபோன்று கிராமத்தில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களையும் குறித்த சிவில் பாதுகாப்பு குழு கண்டுபிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பலரும் பாராட்டு
அத்தோடு சட்டவிரோத செயற்ப்பாடுகளை கட்டுப்படுத்த காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவ்வாறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு காவல்துறையினர் உதவி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் குறித்த கிராம மக்கள் முன்னெடுத்துச் செல்லும் இந்த நடவடிக்கைக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதேபோல் ஒவ்வொரு கிராமமும் தமது கிராமத்தில் போதைப்பொருள் பாவனையை தடுக்க முன்வந்தால் காவல்துறையினர் மீது குற்றம் சாட்டிக்கொண்டு இருக்காது எமது கிராமங்களில், மாவட்டத்தில், நாட்டில் போதைப்பொருள் பாவனையை ஒழிக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.