அதானியின் சிறிலங்கா வருகை! அரசாங்கம் வெளியிட்ட தகவல்
கோடீஸ்வர இந்திய வர்த்தகரான கௌதம் அதானி (Gautam Adani) குழுமத்தின் தலைவர் உள்ளிட்ட குழுவினரது வருகை உத்தியோகபூர்வமானது அல்ல என அமைச்சரவை இணைப்பேச்சாளரும் அமைச்சருமான ரமேஷ் பத்ரண (Dr.Ramesh Pathrana) தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
கௌதம் அதானி குழுமத்தின் வருகை தனிப்பட்டது. கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு அதானி நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.
எனவே அவர்கள் அது தொடர்பில் விசாரித்தல் உள்ளிட்ட முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பிலும் அறிந்து கொள்வதற்கு இலங்கைக்கு வருகை தந்திருக்கலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டத்திலுள்ள தீவுப் பகுதிகளில் காற்றாலை மின்னுற்பத்தி திட்டம் குறித்து சீனாவின் பார்வை திரும்பிய நிலையில், மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின்திட்டம் பற்றி அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் (Gotabaya Rajapaksa) அதானி குழுவினர் பேச்சு நடத்தியிருக்கின்றனர்.
மன்னார் நடுக்குடாவில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது காற்றாலை திட்டத்தைப் பார்வையிட கோடீஸ்வர இந்திய வர்த்தகரான கௌதம் அதானியின் மகன் மற்றும் அதானி குழுமத்தின் நிறைவேற்று அதிகாரி உள்ளிட்டவர்கள் நேற்றைய தினம் மாலை மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.