கோட்டாபயவை மகிழ்விக்க வழங்கப்பட்ட ஆலோசனையால் வந்த விளைவு - புத்திஜீவிகள் சுட்டிக்காட்டு
பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர்கள், பேராசிரியர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள் என மொத்தம் 141 அறிஞர்கள் விவசாயத்துறையில் தற்போது நிலவும் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான பயனுள்ள வேலைத்திட்டத்தை அரச தலைவரிடம் சமர்ப்பிக்குமாறும் அவருடன் கலந்துரையாடலை மேற்கொள்ள சந்தர்ப்பம் அளிக்குமாறும் தெரிவித்து விவசாய அமைச்சின் செயலாளரிடம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர்.
அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த காலங்களில் அரச தலைவருக்கு மிக நெருக்கமாக ஆலோசனை வழங்கியவர்களில் சிலர் விவசாயம் தொடர்பான அனைத்து அடிப்படைக் கோட்பாடுகளையும் அறியாமல் இந்த ஆலோசனையை வழங்கியிருப்பது எமக்கு மிகத் தெளிவாகத் தெரிகிறது.
மேலும், சம்பந்தப்பட்ட சில மூத்த அதிகாரிகள் தங்களின் சொந்த தற்காப்பு மனோபாவத்தை கடைப்பிடித்து, அரச தலைவரை மகிழ்விக்கும் நோக்கத்துடன் அனைத்து தவறுகளுக்கும் உடன்படுவதன் அடிப்படையில் இந்த திட்டத்திற்கு தேவையான சரியான விவசாயத்தை உருவாக்கத் தவறிவிட்டனர்.
தற்போதைய அரசாங்கத்தின் நோக்கங்களை யதார்த்தமாக அடைய, உலகின் பிற பகுதிகளில் வெற்றிகரமான சோதனைகள் மற்றும் நமது நாட்டில் இயற்கை விவசாயத்தின் உண்மையான திறன் மற்றும் அது தொடர்பான சமீபத்திய தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒரு திறமையான மற்றும் பயனுள்ள திட்டத்தை முன்மொழிவது எங்கள் நோக்கமாகும்.
இந்த வேலைத்திட்டத்தை அரச தலைவரிடம் சமர்ப்பித்து அவருடன் கலந்துரையாடுவதற்கு எமது பிரதிநிதிகளுக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.