புதிய அரசாங்கத்தை அமைக்க மைத்திரிக்கு ஆலோசனை
புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டுமெனின், தற்போதைய ஆளும் அரசாங்கத்தில் இருந்து முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி வெளியேற வேண்டுமென, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் (Mano Ganesan) தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் இருந்துகொண்டு புதிய அரசாங்கத்தை அமைக்கப்போவதாக கருத்து வெளியிடுவதில் எவ்வித பலனும் இல்லை எனவும், முதலில் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுமாறு மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை முன்வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள ஜனநாயக மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் மனோ கணேசன் தலைமையில் இன்று தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே மனோ கணேசன் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“இலங்கையில் வடக்கில் தமிழர்களும், தெற்கில் சிங்களவர்களும், கிழக்கில் முஸ்லிம்களும் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். எனினும் இலங்கையில் விவசாயிகளே பெரும்பான்மையானவர்கள்.
தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளால் ஏற்பட்ட உரத்தட்டுப்பாடு அந்த மக்களை பெரிதும் பாதித்துள்ளது. எனினும் அரசாங்கம் இதனைக் கண்டும் காணாததுபோல் இருக்கிறது” என்றார்.