ரஷ்யாவுடன் நல்லுறவு -மீண்டும் கட்டுநாயக்காவில் தரையிறங்கவுள்ள ஏரோஃப்ளோட்
மீண்டும் சேவை
இலங்கைக்கான விமான சேவையை இடைநிறுத்தியிருந்த ரஷ்ய விமான நிறுவனமான ஏரோஃப்ளோட் மீண்டும் தனது சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் ஒன்பதாம் திகதி முதல் கட்டுநாயக்காவுக்கான விமானசேவை வாரத்தில் இரண்டு தடவைகள் இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டைவிட்டு வெளியேற தடை
கடந்த ஜூன் மாதம் கட்டுநாயக்காவில் தரையிறங்கிய ஏரோஃப்ளோட் பயணிள் விமானம் தொடர்பில் அயர்லாந்திலிருந்து தாக்கல் செய்யப்பட்ட மனு காரணமாக கொழும்பு வர்த்தக நீதிமன்றம் குறித்த விமானம் நாட்டைவிட்டு வெளியேற தடைவிதித்திருந்தது.
இதனால் ரஷ்யாவிற்கும் - இலங்கைக்கு இடையே முறுகல் நிலை ஏற்பட்டதுடன் விமான சேவையையும் நிறுத்தப்பட்டது.
பகிரங்க மன்னிப்பு கோரிய அமைச்சர்
எனினும் நீதிமன்றம் பின்னர் தடையை நீக்கியதுடன் அண்மையில் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இந்த செயலுக்கு பகிரங்க மன்னிப்பும் கோரியிருந்தார்.
இந்த நிலையிலேயே கட்டுநாயக்காவுக்கான விமானசேவை இடம்பெறுமென குறித்த விமான நிறுவனம் அறிவித்துள்ளது.