வெடுக்குநாறி மலை பூசகரிடம் மீண்டும் காவல்துறை விசாரணை!
வவுனியா, வெடுக்குநாறி மலை ஆலயத்தின் பூசகர் மற்றும் நிர்வாக உறுப்பினர் ஒருவரும் நெடுங்கேணி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் வவுனியா நீதிமன்றால் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில், நேற்று அடுத்த விசாரணைக்கு வருமாறு ஆலயத்தின் பூசகர் மற்றும் அவரது மனைவிக்கு நெடுங்கேணி காவல்துறையினர் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளனர்.
நெடுங்கேணி காவல்நிலையத்திற்கு சென்ற அவர்களிடம் மூன்று மணிநேரத்திற்கு மேலாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விசாரிக்கப்பட்ட விடயம்
குறிப்பாக, 2019 ம் ஆண்டு மலையில் ஏணிப்படி வைத்தது யார், அதற்கு நிதி வழங்கியது யார் போன்ற விடயங்களை தெரிவிக்கக் கோரி விசாரணைகள் இடம்பெற்றுள்ளது.
அதேசமயம், இன்றையதினம் ஆலய பரிபாலன சபையின் போசகர் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, சிவபூமி அறக்கட்டளையின் ஸ்தாபகர் ஆறு திருமுருகன் அவர்களிடம் யாழில் வைத்து நெடுங்கேணி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
புதிதாக வழங்கிய விக்கிரகங்கள் தொடர்பில் குறித்த விசாரணை இடம்பெற்றுள்ளது.
ஆதங்கம்
"எங்கள் மீதான விசாரணைகளே தொடர்ந்து கொண்டு இருக்கின்றது.
ஆனால் ஆலய விக்கிரகங்கள் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எந்த சந்தேக நபர்களையும் நெடுங்கேணி காவல்துறையினர் கைது செய்யவில்லை, எந்த விசாரணையும் முன்னெடுக்கவில்லை." என ஆலய நிர்வாகத்தினர் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
