பழனிசாமிக்கு எதிரான முறைப்பாடு - விசாரணை நடத்த தமிழ் நாடு அரசு அனுமதி..!
அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மீதான இலஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரி கட்டடங்கள் கட்டுவதில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் சர்ச்சை குறித்து விசாரணைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர் உள்பட 11 மாவட்டங்களில் தலா 150 மாணவர்கள் படிக்கும் வகையில் "4080கோடி" ரூபாய் செலவில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஊழல் குற்றச்சாட்டு
இந்தக் கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளின்படி அமைக்கப்படவில்லை என்றும், மருத்துவக் கல்லூரிகள் கட்டுவதில் மிகப் பெரும் அளவில் ஊழல் நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
அப்போது பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளை கவனித்து வந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் உள்ளிட்டோர் இந்த ஊழலில் ஈடுபட்டுள்ளதாகவும் முறைப்பாடு எழுந்தது.
இதில், எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக உள்ளதால், இதுகுறித்து மேல் விசாரணை செய்ய அனுமதி அளிக்குமாறு தமிழ்நாடு அரசிடம் இலஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் கடந்த ஒகஸ்ட் மாதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
நடவடிக்கை
இதனையேற்று, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீதான முறைபாடு குறித்து விசாரிக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த விசாரணையை சிறப்பு புலனாய்வுக்குழு வசம் ஒப்படைக்க இலஞ்ச ஒழிப்புத்துறை திட்டமிட்டுள்ளது.
மேலும், எடப்பாடி பழனிசாமிக்கு சம்மன்(விசாரணைக்கு முன்னிலை ஆவதற்கான மனு) அனுப்பி விசாரிக்கப்படலாம் என்றும் சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களை ஆராய்ந்து அதனடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
