மியன்மாரில் புத்த மடாலயம் மீது வான்வழித் தாக்குதல் : 23 பேர் பரிதாபமாக பலி!
மியன்மார் (Myanmar) நாட்டின் மத்திய மாகாணத்தில், அமைந்திருந்த புத்த மடாலயத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அங்கு தஞ்சமடைந்திருந்த மக்களில் 23 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சகாயிங் மாகாணத்தில் உள்நாட்டு கிளர்ச்சிப்படைக்கும், மியன்மார் இராணுவத்துக்கும் இடையில் கடந்த சில வாரங்களாக மோதல்கள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில், அம்மாகாணத்தின் லின் தா லூ கிராமத்தில் அமைந்திருந்த புத்த மடாலயத்தின் மீது நேற்று (10) நள்ளிரவு போர் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
23 பேர் கொல்லப்பட்டனர்
இதில், 4 குழந்தைகள் உட்பட 23 பேர் கொல்லப்பட்டதாக, உள்நாட்டு கிளர்ச்சிப்படை இன்று (11) தெரிவித்துள்ளது.
இருதரப்புக்கும் இடையில் நடைபெறும் மோதல்களிலிருந்து தப்பித்து மடத்தில் தஞ்சமடைந்திருந்த சுமார் 150க்கும் மேற்பட்டோர் இரவு உறங்கிக்கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
30க்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாகவும், அதில் 10 பேரது உடல்நிலையானது தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனினும், கிளர்ச்சிப்படைகளை மட்டுமே குறிவைத்து தங்களது தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகக் கூறும், மியன்மார் இராணுவம்தான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
கடந்த 2021ஆம் ஆண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகி (Aung San Suu Kyi) தலைமையிலான அரசை கைப்பற்றி, இராணுவத்தின் ஆட்சி அமைக்கப்பட்டது முதல் மியன்மாரில் உள்நாட்டு மோதல்கள் அதிகரித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
