தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட பெண் அதிகாரி! அக்கரைப்பற்று முன்னாள் மேயருக்கு விளக்கமறியல்
அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி தவறான முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சக்கி அதாவுல்லாஹ்வை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ் வழக்கு அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் நேற்று(18) செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வராக சக்கி அதாவுல்லாஹ் செயற்பட்டு வந்த போது, அங்கு கடமையாற்றிய அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட அரச உத்தியோகத்தரான பெண் ஒருவரைத் திருமணம் முடிப்பதாக வாக்குறுதி அளித்து தன்னைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
கைது நடவடிக்கை
குறித்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பெண், அண்மையில் முகநூல் நேரலை ஊடாக நியாயம் கேட்டிருந்ததுடன், சம்பவம் குறித்து அம்பாறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திலும் முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டைத் தொடர்ந்து, அம்பாறை சிறுவர் மற்றும் மகளிர் காவல்துறை பிரிவினால் தேடப்பட்டு வந்த சந்தேகநபரான சக்கி அதாவுல்லாஹ், வாக்குமூலம் வழங்குவதற்காக அம்பாறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு வருகை தந்திருந்தார்.
இதன்போது, அப்பிரிவின் பொறுப்பதிகாரி பிரதம காவல்துறை பரிசோதகர் தயானி கமகே தலைமையிலான குழுவினரால் அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவு
இந்நிலையில், அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் பாலியில் துஷ்பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக அம்பாறை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினரால் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இதன்படி, சட்ட நடவடிக்கைகளுக்காக நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட வேளையில், அவரை இன்று ஓகஸ்ட் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |