நீதி அமைச்சரின் செயற்பாட்டில் அதிருப்தி! கோட்டாபயவிற்கு தேரர் கடிதம்
பொலிஸ் பரிசோதகர்களாக 150 சட்டத்தரணிகளை இணைத்துக் கொள்ளும் நீதி அமைச்சரின் திட்டத்தின் மூலம் இனவாத மதவாத சதி முன்னெடுக்கப்படுகின்றது என கொழும்பு 7, தர்ம நிறுவனத்தின் தலைவர் எல்லே குணவன்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
இதனை தௌிவுபடுத்தி எல்லே குணவன்ஸ தேரர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இந்த சட்டத்தரணிகள் இணைப்பு விடயத்தில் தமிழ் மொழி திறன் விசேட திறமையாக கருதப்படும் என்ற ஏற்பாட்டின் மூலம் முஸ்லிம்கள் பலருக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதாக தேரர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்மூலம் இனவாத மதவாத குழுவினர் அரச நிறுவனங்களில் புகுந்து பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டத்தின் மூலம் முஸ்லிம் அடிப்படைவாத செயற்பாடுகளை அதிகரிக்கவே நீதி அமைச்சர் அலி சப்ரி திட்டமிட்டு செயற்படுவதாக எல்லே குணவன்ச தேரர் கூறினார்.
எனவே நீதி அமைச்சர் அலி சப்ரி முன்வைத்துள்ள யாப்பு விரோத, மக்களுக்கு துரோகம் இழைக்கும் இனவாாதம் மதவாதத்தை போசிக்கும் பொலிஸ் துறைக்கு சட்டத்தரணிகளை இணைத்துக் கொள்ளும் திட்டத்தை செயற்படுத்த வேண்டாம் என்றும் அவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.