அவசியமான சில வாகனங்களை இறக்குமதி செய்ய தீர்மானம் - இராஜாங்க அமைச்சர் உத்தரவாதம்
அண்மையில் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பொது போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்களான பேருந்துகள் மற்றும் விசேட தேவைகளுக்கு தேவையான பாரவூர்திகளை இறக்குமதி செய்வதற்கான கடன் கடிதங்கள் வழங்குவது தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க நேரடியாக தலையிடுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
வாகன இறக்குமதியாளர்களுடனான கலந்துரையாடலின் போதே இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் கடன் கடிதங்களுக்கு சர்வதேச அங்கீகாரம் வழங்குவது தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு தயாராக இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்படவில்லை

இலங்கையின் கடன் கடிதங்கள் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்காக எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்படவில்லை என இதன்போது வாகன இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரசாங்கம் அண்மைக்காலமாக சில வாகனங்களுக்கான இறக்குமதிக் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ள போதிலும், வாகனங்களை இறக்குமதி செய்யும் முயற்சியில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக இலங்கை மத்திய வங்கி மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று வாகன இறக்குமதியாளர்களுக்கு இராஜாங்க அமைச்சர் உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.