ஈரான் பதற்றத்துக்கு மத்தியில் ரூபியோவின் மத்திய கிழக்கு விஜயம் ஆரம்பம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆதரவு அளித்துள்ள ஈரான் ஒப்பந்தம் தொடர்பாக வளைகுடா நாடுகளின் கவலைகளைத் தீர்க்கும் நோக்கில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தனது மூன்று நாள் மத்திய கிழக்கு சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
இதற்கமைய நேற்று(23.06.2026) இரவு அபுதாபி வந்தடைந்த ரூபியோ, ஈரானுடனான நான்கு மாத கால அமெரிக்கா - இஸ்ரேல் மோதலை முடிவுக்குக் கொண்டுவந்ததாகக் கூறப்படும் ஒப்பந்தம் குறித்து பிராந்திய நட்பு நாடுகளுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
ஈரானுக்கு முன்மொழியப்பட்டுள்ள 300 பில்லியன் டொலர் புனரமைப்பு நிதி தொடர்பாக வளைகுடா நாடுகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை
அந்த நிதி, ஈரான் தனது இராணுவ வலிமையை மீண்டும் கட்டியெழுப்ப பயன்படுத்தப்படலாம் என்ற அச்சம் அவற்றிடம் நிலவுகிறது.

மேலும், ஒப்பந்தத்தில் ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டம் குறித்து எந்தத் தெளிவான ஏற்பாடும் இடம்பெறாதது கூடுதல் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அபுதாபியில் செய்தியாளர்களிடம் பேசிய ரூபியோ, கூட்டாளி நாடுகளின் கவலைகள் தொடர்பான விவாதங்கள் இந்தச் சந்திப்புகளில் இடம்பெறும் என தெரிவித்தார். ஒப்பந்தத்தில் சேர்க்கப்படாத முக்கிய அம்சங்கள் குறித்தும் ஆலோசனைகள் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் ஈரானிய பிரதிநிதிகளுடன் நேரடி பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்த நிலையில், ரூபியோ இந்த விவகாரத்தில் முதல் முக்கிய இராஜதந்திரப் பயணத்தை மேற்கொள்கிறார்.
அமெரிக்காவின் இராணுவத் தளங்கள்
இந்தப் பயணத்தின் போது அவர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லவுள்ளார். இந்நாடுகளில் அமெரிக்காவின் முக்கிய இராணுவத் தளங்கள் அமைந்துள்ளதுடன், சமீபத்திய மோதலின்போது ஈரானிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களாலும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், வளைகுடா நாடுகள் மீது தாக்குதல்களை நடத்தும் நோக்கில் ஈரான், ஈராக்கில் புதிய இரகசிய ஆயுதக் குழுக்களை உருவாக்கியுள்ளதாக கடந்த வாரம் வெளியான தகவல்கள் மேலும் பாதுகாப்பு அச்சங்களை அதிகரித்துள்ளன.
ரூபியோவின் இந்தப் பயணம், டிரம்ப் நிர்வாகத்தின் ஈரான் கொள்கைக்கு பிராந்திய ஆதரவைப் பெற்றுத் தருவதிலும், வளைகுடா நாடுகளின் பாதுகாப்பு கவலைகளை சமாளிப்பதிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 5 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்