மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டோம்: அநுரவின் மே தின எச்சரிக்கைக்கு நாமல் பதிலடி
யாருடைய வழக்கை முதலில் விசாரிக்க வேண்டும் மற்றும் யாரைச் சிறைக்கு அனுப்ப வேண்டும் என்பதைத் தேசிய மக்கள் சக்தியின் பெலவத்த கட்சி அலுவலகமே தீர்மானிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
களனி விகாரையில் நேற்று (02-05-2026) விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.
இதையடுத்து, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
டொலர் மோசடி
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “மே தினக் கூட்டங்களில் தொழிலாளர் உரிமைகள் பற்றிப் பேசுவதற்குப் பதிலாக அரசியல் எதிராளிகளைச் சிறைக்கு அனுப்புவது குறித்தே ஜனாதிபதியும் ஆளும் தரப்பினரும் பேசினார்கள்.
இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை.

தேசிய மக்கள் சக்தி வழங்கிய வாக்குறுதிகள் போலியானவை என்பதை மக்கள் உணர்ந்துள்ளதால் அரசு தற்போது அடக்குமுறையைக் கையாண்டு வருகின்றது.
323 கொள்கலன்கள் விடுவிப்பு குறித்து முறைப்பாடளித்த டான் பிரசாத் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்.
2.5 மில்லியன் டொலர் மோசடி விவகாரத்தில் திறைசேரியின் முன்னாள் உதவிப் பணிப்பாளர் உயிரிழந்துள்ளமை சந்தேகத்துக்குரியது.
அரசின் ஊழல் மோசடிகளை நாம் தொடர்ச்சியாக வெளிப்படுத்துவோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
2.5 மில்லியன் டொலர் மோசடி- அதிகாரியின் உயிரிழப்புக்கு அரசின் தவறான முடிவுகளே காரணம்: விமல் வீரவன்ச சாடல்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |