சித்து விளையாட்டில் விக்கி - வேதனை தரும் விடயம் என்கிறார் அங்கஜன்
விக்கினேஸ்வரன் சித்து விளையாட்டில் இறங்கியிருக்கின்றார் என யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
ஜெனீவா அமர்வை காரணம் காட்டி சுற்றுலா செல்லும் தமிழ் அரசியல் தலைவர்களுக்கு இவ்வருடம் கொரோனா தொற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், ஜெனீவா செல்லமுடியாத காரணத்தினாலேயே இந்த வருடம் அறிக்கைகளை வெளியிட்டு அவர்கள் அரசியல் பிழைப்பு நடத்துவதாகவும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.
எனினும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக தாம் யார் பின்னாலும் செல்லத் தயார் என யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் அவர் கூறினார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
விக்னேஸ்வரனின் நேர்மை எனக்கு பிடித்திருந்தது. அவர் மீது நீண்ட காலமாக எனக்கு மதிப்பும் இருந்தது. ஆனால் தற்போது அவர் வாயை திறந்தாலே,அவர் மீதான மதிப்பு குறைந்துகொண்டே வருகின்றது. அவர் கூறுகின்ற விடயங்கள் ஒரு சராசரி அரசியல்வாதி போல மாறிவிட்டது.
யார் ட்ரெண்டிங்கில் இருக்கின்றார்களோ அவர் மீது தாக்குதலை தொடுக்கின்ற சித்து விளையாட்டில் இறங்கியிருக்கின்றார். இது உண்மையிலேயே வேதனையான விடயம். அவர் விடுகின்ற அறிக்கையின் மூலமே அவர் இருக்கிறார் என்பதே எனக்கு தெரிகின்றது.
யார் வெற்றிபெறுவார்கள், யார் தோல்வி அடைவார்கள் என்பதை அவர் கூறமுடியாது. ஏனென்றால் கடந்த தேர்தலில் தட்டுத்தடுமாறி அவருக்கு ஒரு ஆசனம் கிடைத்திருந்தது.
இந்த நிலையில், நாமல் ராஜபக்சவுக்கு பின்னால் நாங்கள் போகின்றோம் என ஒரு பத்திரிக்கையை சுட்டிக்காட்டி ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்.
மக்களை கல்வி ரீதியாக, பொருளாதார ரீதியாக உறுதி செய்வதற்காக அமைச்சர் நாமல் ராஜபக்ச துணை நிற்பாராக இருந்தால் அவருக்கு பின்னால் நான் முழு இடமும் செல்வேன். என்னுடைய மக்களை வாழ வைக்கவும் என்னுடைய மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் எந்தளவு தூரத்திற்கு நான் செல்வதற்கு தயார்.
நாங்களும் செய்யமாட்டோம், செய்கின்ற அவர்களையும் விட மாட்டோம் என்ற அரசியலை முன்னெடுத்து வருகின்றார்கள்.
மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டு நீண்ட காலப் பிரச்சினைகளுக்கு தீர்வை தேட முடியும். ஆனால் அன்றாட பிரச்சினைகளுக்கு எந்தவித பதிலையும் வழங்காது அறிக்கை அரசியல் மேற்கொள்வதில் எனக்கு எவ்வித உடன்பாடும் கிடையாது.
யாருக்கு பின்னால் நின்றால் மக்களுடைய தேவையை பூர்த்தி செய்யலாமோ அவர்களுக்குப் பின்னால் நின்று எமது மக்களுக்கு தேவையான விடயங்களை செய்வதை எனது கடமையாக பார்க்கின்றேன்.
இவருக்கு பின்னால் நான் சொல்வதா அவருக்கு பின்னால் நான் சொல்வதா என ஈகோ பார்த்துக் கொண்டிருந்தால் எமது மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள் என்றார்.