தமிழர் பகுதிகளில் நடைபெற்ற அன்னை பூபதியின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல்
ஈழத் தமிழர்களின் உரிமைக்காகவும், போரை நிறுத்த வலியுறுத்தியும் இந்திய அமைதிப்படைக்கு எதிராக அறப்போர் புரிந்து உயிர்நீத்த தியாகத் தாய் அன்னை பூபதியின் 38வது நினைவேந்தல் நிகழ்வு தமிழர் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று (19) திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் இந்த நினைவேந்நதல் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது அன்னை பூபதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி, சுடர் ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் தமிழ் உணர்வாளர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்திகள் - தோம்ஷன்
பருத்தித்துறை
யாழ்ப்பாணம் - பருத்தித்துறையில் தியாக தீபம் அன்னை பூபதியின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.
பண்ணையம்பதி பகுதியில் உள்ள பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் ஜெய கோபியின் அலுவலகத்தில் ஜனநாயக போராளிகள் கட்சியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் இன்று (19) காலை10:30 மணியளவில் இந்த நினைவேந்நதல் நிகழ்வு இடம்பெற்றது
இதன்போது தியாக தீபம் அன்னை பூபதியின் திருவுருவப் படத்திற்கு ஜனநாயக போராளிகள் கட்சி தலைவரால் ஈகைச்சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு பின்னர் அக வணக்கம் செலுத்தப்பட்டது.
தையிட்டி காணி அளவீட்டுக்கு நாள் குறித்து விட்டு வெளிநாட்டிற்கு தப்பியோடிய அமைச்சர் : எழுந்துள்ள குற்றச்சாட்டு
அன்னை பூபதியின் தியாகம்
இதனையடுத்து அன்னை பூபதியின் தியாகம் மற்றும் அவரின் வாழ்க்கை பயணம் பற்றியும் கருத்துக்கள் பகிரப்பட்டது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சியின் இளைஞர் அணியினர் என பலரும் கலந்து கொண்டனர்.
செய்திகள் - லின்ரன்
அன்னை பூபதியின் 38வது ஆண்டு நினைவு தினம் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் வவுனியாவில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
குறித்த அஞ்சலி நிகழ்வானது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் வவுனியா ஏ9 வீதியில் 3356 வது நாளாக சுழற்சி முறை போராட்டத்தில் ஈடுபடும் பந்தலில் இடம்பெற்றது.
இதன்போது அன்னை பூபதியின் திருவுருவ படத்திற்கு விளக்கேற்றி, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அன்னை பூபதியின் தியாகம் மற்றும் உரிமை கோரிய போராட்டங்கள் மீண்டும் நினைவுகூரப்பட்டன.

செய்திகள் - கபில்
திருகோணமலை
1988ஆம் ஆண்டு இந்திய ஆக்கிரமிப்புக்கெதிராக அகிம்சை வழியில் போராடி உயிர் நீத்த தியாகச் சுடர் அன்னை பூபதியின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை மாவட்டம் தழுவிய ரீதியில் வெருகல் கலாச்சார மண்டபத்தில்ஏற்பாட்டுக்குழுவினால் இன்று (19) முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வில் ஈகைச் சுடரினை நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் சட்ட ஆலோசகரும் திருக்கோணஸ்வரர் ஆலய பரிபாலன சபையின் தலைவருமான சட்டத்தரணி துஸ்யந்தன், வெருகல் பிரதேச சபையின் தவிசாளர் கருணாநிதி ஏற்ற , மாவீரரின் தாயாரான த. காளியாச்சி அவர்கள் அணிவிக்க பொதுச் சுடரினை மாவீரரரின் தாயாரான த. தங்கமணி ஏற்றியதைத் தொடர்ந்து அகவணக்கமும் அன்னைக்கு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தலைமையுரையினை நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் க. பண்பரசன் நிகழ்த்தியிருந்தார்.

செய்தி - ரொஷான்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
