கோட்டாபய அனுப்பிய பதில்! ஏற்க மறுத்து திரும்பிச் சென்ற போராட்டக்காரர்கள்
காணி அபகரிப்புத் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து அரச தலைவர் மாளிகைக்கு முன்னால் மேற்கொண்ட ஆர்ப்பட்டம் தொடர்பில் அரச தலைவர் தனது செயலாளர் ஊடாக தகவல் ஒன்றிணை அனுப்பியுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் (Mano Ganesan) மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் (Charles Nirmalanathan) ஆகியோர் எமது செய்திப்பிரிவிற்கு தெரிவித்துள்ளனர்.
இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் ஐ.பி.சி தமிழ் ஊடகப்பிரிவு மனோ கணேசன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரிடம் தொலைபேசி ஊடாக வினவியது.
இது தொடர்பில் மனோ கணேசன் கருத்து தெரிவிக்கையில்,
தமிழ் பிரதேசங்களில் இடம்பெறும் காணிப்பிரச்சினை மற்றும் நில அபகரிப்புத் தொடர்பில் சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் கவனத்தினை ஈர்க்கும் வகையில் கவனயீர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டிருந்தோம்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்வின் அலுவலக செயலாளர் ஒருவர் போராட்ட இடத்திற்கு வருகை தந்துள்ளார். நாங்கள் கையளிக்க இருந்த கடிதத்தினை பெற்றுவருமாறு கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் அரச தலைவரைச் சந்தித்து எமது பிரச்சினைகளை கூறி அவரிடமே கடிதத்தினை கையளிக்க வேண்டும் என கூறினோம்.
அடுத்த வாரமளவில் சந்திப்பதற்கு அரச தலைவர் சந்திப்பதாக கூறியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சார்ள்ஸ் நிர்மலநாதன் கருத்து தெரிவிக்கையில்,
நில அபகரிப்புத் தொடர்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்து அரச தலைவரிடம் கடிதம் ஒன்றினை கையளிக்க இருந்தோம். ஆனால் அரச தலைவர் அதனை பெற்றுக் கொள்ளவில்லை.
அதற்குப் பதிலாக செயலாளர் ஒருவரே வந்திருந்தார். நாங்கள் அவரிடம் கையளிக்கவில்லை.
அவர் சார்பாக ஒரு அமைச்சர் ஒருவர் இந்தக் கடிதத்தினை பெற்றுகொண்டிருந்தால் கூட எமக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை.
அடுத்த வாரம் எம்மோடு கலந்துரையாட யோசிக்கின்றார் என செயலாளர் கூறினார். எமக்கு அதில் எந்த மறுப்பும் இல்லை. அமைச்சர்கள் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் வேண்டும். நேரம் எடுத்துத் தான் கலந்துரையாட வேண்டும்.
ஆனால் இந்த கடிதத்தினை பெற்றுக் கொண்டிருக்கலாம். செயலாளரிடம் கையளிக்கச் சொன்னார். நாங்கள் கையளிக்க வில்லை. ஆர்ப்பாட்டத்தினை கைவிட்டுவிட்டு நாம் சென்று விட்டோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.