அநுர அரசின் ஊழல் ஒழிப்பு முயற்சி: கரு ஜயசூரிய வெளியிட்ட கருத்து
நாட்டின் துரித முன்னேற்றத்துக்கு இடையூறாக உள்ள இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிக்கும் நோக்கில் தேசிய ஊழல் ஒழிப்பு செயற்திட்டமொன்றை வெளியிடுவதற்கு அநுர அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதை பெரிதும் வரவேற்பதாக சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும், முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய (Karu Jayasuriya) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை அவர் வெளியிட்டுள்ள அறிவிக்கை ஒன்றிலேயே குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலஞ்சம் மற்றும் ஊழல் முற்றாக ஒழிக்கப்படவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நாட்டுமக்களின் விருப்பம் இச்செயற்திட்டத்தின் ஊடாக ஈடேறவேண்டும்.
இலஞ்சம் மற்றும் ஊழல்
அதேபோன்று 2000 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புக்கான 17 ஆவது திருத்தத்தின் ஊடாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு மாற்றத்தின் அடைவாகவே நாம் இந்த முயற்சியைக் கருதுகிறோம்.
அதேவேளை இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான புதிய சட்டமொன்றை உருவாக்குமாறும், அதற்குரிய கட்டமைப்பை வலுப்படுத்துமாறும் கடந்த சில வருடங்களாக நாடளாவிய ரீதியில் வலியுறுத்தப்பட்டுவந்த நிலையில், அதனை இலக்காகக்கொண்டு முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச நாட்டில் இயங்கிவரும் சிவில் சமூகத்தினருடன் ஒன்றிணைந்து செயற்பட்டமை பெரிதும் வரவேற்கத்தக்கதொரு விடயமாகும்.
அதுமாத்திரமன்றி இந்த இலக்கினை அடைந்துகொள்வதற்காக இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் நாயகத்தினால் அளிக்கப்பட்ட ஒத்துழைப்பினையும் பாராட்டுகிறோம். ” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
