ரணில் கைது செய்யப்பட்டதைப் போன்று அநுரவும் கைது செய்யப்படலாம் : எச்சரிக்கும் ஹிருணிகா
நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பிரச்சினை ரணில் விக்ரமசிங்க என்ற தனிநபருடன் மாத்திரம் தொடர்புடையதல்ல. இன்று அவருக்கு ஏற்பட்டுள்ள நிலைமை நாளை தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் ஏற்படலாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர (Hirunika Premachandra) தெரிவித்துள்ளார்.
கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் நேற்று (26) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ”முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு உண்மையல்ல என நீரூபிக்கப்பட்டால் அரசாங்கத்தின் நிலைமை என்ன?
தனிப்பட்ட விஜயம்
இன்று ரணில் விக்ரமசிங்கவுக்கு இடம்பெற்றுள்ள இந்த நிலைமை நாளை தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் (Anura Kumara Dissanayake) ஏற்படலாம்.
தற்போது எந்தவொரு தனிப்பட்ட விஜயமும் செய்வதில்லையா? அவர் என்று ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுகின்றாரோ அதன் பின்னர் மேற்கொள்ளும் விஜயமே தனிப்பட்ட விஜயமாகக் கருதப்படும்.
எமக்கிடையிலான அரசியல் கருத்து வேறுபாடுகளும் முரண்பாடுகளும் அவ்வாறே உள்ளன. அவற்றில் எவ்வித மாற்றமும் இல்லை. ஆனால் இன்று நாம் கூடியிருப்பது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டத்துக்காகும்.
அரசியல் பழிவாங்கலில் ஈடுபடும் அரசாங்கம்
குறிப்பாக இந்த பிரச்சினை ரணில் விக்ரமசிங்க என்ற தனிநபருக்கானதல்ல. இதனை அனைவரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பாரிய தவறிழைத்திருக்கின்றனர். அரசாங்கம் அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுவதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
எனவே தான் மக்கள் இன்று நீதிமன்ற வளாகத்தில் கூடியிருக்கின்றனர். சட்டம் நடைமுறைப்படுத்தப்பட முன்னர் அது தொடர்பில் சமூக வலைத்தளத்தில் நபரொருவர் ஸ்திரமாகக் கருத்து வெளியிடுவாரெனில் நாட்டில் சட்டத்தின் ஆட்சி எந்த நிலைமையிலிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். இவ்வாறான நிலைமை தொடர்ந்தால் நாட்டில் அராஜக நிலைமை ஏற்படும்” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

