நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுர வழங்கிய வாக்குறுதி
இலங்கையில் (Srilanka) ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும் அதனால் ஏற்பட்ட துயரமும் தற்செயலானவை அல்ல என்றும் அவற்றிற்கு பல முக்கிய காரணிகள் இருந்தன என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
மத்திய அதிவேக வீதி வேலைத்திட்டத்தின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான பகுதியின் கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்குவதற்கான ஆரம்ப விழா தற்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
இன்று (17) கட்டுமானப் பணிகளை மீளத் தொடங்குவதற்கான ஆரம்ப நிகழ்வில் பங்கேற்ற போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார ஸ்திரத்தன்மை
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இலங்கையில் இதுபோன்ற பொருளாதார நெருக்கடி மீண்டும் ஒருபோதும் ஏற்படாத வகையில் நாடு கட்டமைக்கப்படும் என மக்களுக்கு உறுதியளித்தார்.
ஒரு நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை கட்டுமானப் பணிகள் மூலம் மட்டும் உருவாக்கப்படுவதில்லை, மாறாக பல்வேறு வழிகளில் உறுதிப்படுத்தப்படுகிறது என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
முழு பொருளாதாரமும் மக்களின் வாழ்க்கையும் பெரும் சரிவைச் சந்தித்துள்ள இத்தருணத்தில், 2026ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்டத்தின் ஊடாக பொருளாதார நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மோசமான பொருளாதார நெருக்கடி
இதேவேளை இலங்கை அடுத்த ஆண்டு 6 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைய இலக்கு நிர்ணயித்துள்ளதாக தொழிலாளர் அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சுதந்திரத்திற்குப் பிறகு நாடு சந்தித்த மிக மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டு வரும் இந்த நேரத்தில் முதலீட்டாளர்களும் இலங்கையர்களும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு இலங்கை 5 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைந்ததாகவும், ஆனால் வரவுசெலவு திட்டத்தை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட தாமதத்தால் அரசாங்க செலவினம் குறைந்ததாகவும், எனவே இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி 4 முதல் 4.5 சதவீதமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
