தமிழர்கள் அநுரவுக்கு வாக்களித்தால் மாற்றம் : வாக்களிக்காவிட்டால் இனவாதமா !
Anura Kumara Dissanayaka
Sri Lanka
Sri Lanka Government
Bimal Rathnayake
By Theepachelvan
Courtesy: தீபச்செல்வன்




முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின்னர் பதினேழு தேர்தல்களை ஈழத் தமிழர்கள் எதிர்கொண்டுள்ளனர்.
தமிழ் மக்களை படுகொலை செய்த மகிந்த ராஜபக்ச அதன் பின்னர் மைத்திரிபால சிறிசேன, அதன் பின்னர் கோத்தபாய ராஜபக்ச, அதன் பின்னர் ரணில் விக்ரமசிங்க என சிறிலங்காவின் எந்த தலைவர்களும் ஈழத் தமிழ் மக்கள் தேர்தலில் வழங்கிய முடிவுகளை இப்படி விமர்சிக்கவில்லை.
ஆனால் அநுர அரசுதான் ஈழத் தமிழ் மக்களின் ஜனநயாக முடிவை ஏற்றுக்கொள்ளத் திராணியற்று, கசிப்பையும் பணத்தையும் கொடுத்து தமிழரசுக் கட்சி வாக்குப்பெற்றது என்ற பொய்யைச் சொல்லி தமது முகத்தை தாமே அசிங்கப்படுத்தியுள்ளனர்.
வாயால் வந்த வினை
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் அதிக வாய்ப்புக்களைக் கொடுத்திருந்தார்கள். தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் யார் என்றே தெரியாத அளவில் வாய்ப்பூட்டு போட்டவர்களாக அமைதியாக உள்ளனர்.

அமைதியாக இருந்து பதவியை அனுபவித்து பேரினவாத்திற்கு சேவகம் செய்வதே அவர்களின் பணி. சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கிற்காக தெரிவு செய்யப்பட்ட அமைச்சர் ஒருவர் பதவி பெற்ற இந்த ஆறு மாத காலத்தில் பல்வேறு சர்ச்சையான பேச்சுக்களைப் பேசி மக்கள் மத்தியில் சலசலப்பை உருவாக்கியதுடன் நகைப்புக்குரியவர்களாகவும் மாறியுள்ளனர்.
இதனால் கடந்த ஆறு மாத காலத்திலேயெ வடக்கு கிழக்கில் அநுர அரச தரப்பினர் தோல்வியைத் தழுவியுள்ளனர். வடக்கு கிழக்கில் ஆசனங்களைப் பெற்றுக் கொண்டு மக்களின் தமிழ் தேசிய உணர்வுக்கு மாறான வகையில் பேசுதல் மற்றும் செயற்படுதல் காரணமாக இந்த தோல்வி நிலையை அநுர அரசு ஈட்டியுள்ளது.
ஆனால் விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத கதையாக ஜேவிபி கட்சியினர் உளறி வருகின்றனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்தி பின்னடையவில்லை என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க முதலில் கூறியிருந்தார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்தி பின்னடையவில்லை, தமிழ் மக்கள் தேசிய அரசியலில் எம்முடன் கைகோர்த்ததை போன்று பிரதேசவாரியான அரசியலிலும் எம்முடன் ஒன்றிணைந்துள்ளார்கள் என்றும் முதலில் பேசியிருந்தார்.
🛑 சதி செய்தது யார் ?
தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தி மீது வைத்துள்ள நம்பிக்கை குறையவே இல்லை. மக்களின் எதிர்பார்ப்புகளை நாம் நிச்சயம் நிறைவேற்றுவோம். அரசியல் இருப்புக்காகவே தேசிய மக்கள் சக்தியை தமிழ் மக்கள் நிராகரித்துவிட்டதாக சில குழுக்கள் போலி பிரச்சாரம் முன்னெடுத்து வருகின்றன என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் கூறியதுடன் சதிகார அரசியல்வாதிகளால் எம்மையும் மக்களையும் பிரிக்க முடியாது என்றும் சந்திரசேகரன் பேசியுள்ளார்.
ஜேவிபி உறுப்பினர்களின் சர்ச்சையான பேச்சக்களே அவர்களை மக்களிடம் இருந்து பிரிக்கின்றதே தவிர வடக்கு கிழக்கு அரசியல் தலைவர்கள் அதைச்செய்யவில்லை.

வடக்கு கிழக்கு அரசியல் தலைவர்களை சதிகார தலைவர்கள் என்று அமைச்சர் விழித்திருப்பதும் அவரது மாண்பைக் காட்டுகிறது. கடந்த காலத்தில் வடக்கு கிழக்கைப் பிரித்து, இனப்படுகொலைப் போரை ஆரம்பித்து புலிகளை அழியுங்கள் என மகிந்த அரசுக்கு அழுத்தம் கொடுத்து சதிசெய்து ஈழ இனப்படுகொலையை நிகழ்த்திய ஜேவிபி எமது தலைவர்களை சதிகார தலைவர்கள் என்று நாக்குகூசாமல் பேசுகின்றனர்.
இத்தகையபேச்சே அடுத்த தேர்தலிலும் மக்களிடமிருந்து ஜேவிபியை பிரிக்கும் அக்கட்சியின் சுயசதி என்பதை முதலில் உணருங்கள். அதேபோல தமிழ் தேசிய உணர்வுக்காகவும் என்பிபியின் தமிழ்இன விரோதச் செயல்களுக்காகவும் மக்கள் தேர்தலில் பாடம் புகட்டியிருக்க கசிப்புக்காக மக்கள் வாக்களித்தனர் என்று மற்றொரு அவதூறுப் பேச்சைப் பேசி தன் தலையில் மண்டைப் போட்டுள்ளது என்பிபி என முகம் தரித்துள்ள ஜேவிபி.
🛑 பிமலில் உளறல்
“தமிழரசுக் கட்சி வாக்குகளை பெறுவதற்காக கசிப்பு வழங்கினார்கள்.மக்களுக்கு பணத்தையும் வழங்கி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இனவாத கருத்துக்களை பயன்படுத்தினர்.

அவை கூறுவதற்கு தகுந்த வார்தைகள் அல்ல என்ற காரணத்தினால் நான் அவற்றை இங்கு சுட்டிக்காட்ட விரும்பவில்லை. நாங்கள் நினைத்திருந்தால் எங்களாலும் பணத்தை வழங்கியிருக்க முடியும் ஆனால், நாங்கள் அதனை செய்யவில்லை…” என்று அமைச்சர் பிமல் ரத்னாயக்கா உளறியிருப்பதுதான் சொந்த செலவில் சூனியம் வைத்துள்ள அடுத்த சர்ச்சை.
அத்துடன் அமைச்சர் சந்திரசேகரனும் கொழும்பு தனியார் தொலைக்காட்சியில் நடந்த விவாத்ததில் இந்தக் அவதூறை அள்ளி வீசியுள்ளார்.
முதலில் என்பிபிக்கு பின்னடைவில்லை என்று சொல்லிவிட்டு பின்னர் கசிப்புக் கதையை கட்டி அந்தப் பின்னடைவை மறைக்க முயலும் என்பிபி, மக்களின் ஜனநாயகத் தீர்ப்பை ஏற்க முடியாத மனநிலையை இதன் ஊடாக வெளிப்படுத்தியுள்ளது.
அரசியலில் தீவிரவாதிகளாக என்பிபி பேசுகின்றபோதுதான் ஜேவிபியின் முகம் வெளிப்படுகிறது. கடந்த காலத்தில் மகிந்தவுக்கு வடக்கு கிழக்கு மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்காமையினால் அவர் தோல்வியைத் தழுவியபோது நான் ஈழ மக்களால் தோற்கடிக்கப்பட்டேன் என்று சொன்னார். ஒரு இனப்படுகொலையாளிகூட தோல்வியை ஏற்றுள்ள நிலையில் இவர்கள் அதனை ஏற்க இயலாதவர்களாக இருக்கின்றனர் என்பது இவர்களின் அரசியல் பண்பு எத்தகை ஆபத்தானது என்பதை உணர்த்துகிறது.
🛑 வாக்கு எமது ஆயுதம்
ஈழத் தமிழினம் வாக்குகளையும் ஆயுதமாகவே பயன்படுத்தி வருகிறது. எந்தச் சலுகைகளுக்கும் எமது மக்கள் கடந்த காலத்தில் வாக்களிக்கவில்லை என்பது எங்கள் தனித்துவமாக வரலாறு.
இன விடுதலைக்காக உயிர்களை ஈகம் செய்த எங்கள் மண்ணின் அரசியலும் ஒழுக்கமும் பண்பும் நிறைந்தது என்பதை ஜேவிபியினர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

தேர்தல் வாக்குகளுக்காக தலைவர் பிரபாகரன் பற்றியும் மாவீரர்கள் பற்றியும் பிரச்சாரப் பாடல் உருவாக்கி பரப்பி வாக்குகளை கேட்டுவிட்டு அதற்கும் தமக்கும் தொடர்பில்லை என்று கைவிரிக்கும் ஊழலுல் கேலிக்கூத்தும் நிறைந்த தரப்பு ஈழத் தமிழ் மக்களின் தனித்துவமான அரசியல் பயணத்தை அறிய வாய்ப்பில்லைத்தான். “தனித்துவமான இனத்தினுடைய விடுதலை இயக்கமே இலங்கை தமிழரசுக் கட்சி.
இந்தக் கட்சி மக்களுக்குக் கசிப்பையும் பணத்தையும் வழங்கியே உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ள கருத்து முறையற்றது, நிராகரிக்கத்தக்கது.
இந்தக் கருத்தை அவர் உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் வலிதெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கட்சிகளுக்கு எதிராகவும் வடக்கு கிழக்கில் தமது அரசு மேற்கொள்ளும் இனவாத செயற்பாடுகளுக்கு ஆதரவாகவும் என்பிபி சமூக வலைத்தள அணியையும் உருவாக்கியுள்ளது. அவர்கள் பிமல் ரத்னநாயக்கா போல அவதூறுகளை அள்ளி வீசுபவர்களாக உள்ளனர்.
என்பிபியின் ஜனநாயக முகமும் வார்த்தைகளும் அணுகுமுறையும் எப்படியானது என்றால் – வடக்கு கிழக்கு மக்கள் தமக்கு வாக்களித்தால் மாற்றம் என்பார்கள். வாக்களிக்கவில்லை என்றார் இனவாதம் என்பார்கள்.
கசிப்புக்காக வாக்களித்தனர் என்பார்கள். இதுவே ஜேபிவியின் உண்மை முகம். அன்று ஈழத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாத சித்திரித்த கோரமுகம் இதுவே. வாயால் வினைகளை விதைப்பதும் வாயால் பேரழிவுகளை உண்டுபண்ணுவதும் தான் ஜேபிவியின் அரசியல் பாரம்பரியம்.
நாடாளுமன்றத் தேர்தலில் அளித்த வாக்குகளுக்காக இன்னமும் சில ஆண்டுகள் இதனை வடக்கு கிழக்கு எதிர்கொள்ளத்தான் வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 12 May, 2025 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி