தனது நண்பனை முக்கிய பதவியில் நியமிக்க முயற்சிக்கும் அநுர : அம்பலப்படுத்திய முன்னாள் எம்.பி
தனது பல்கலைக்கழக நண்பனை தலைமை கணக்காய்வாளராக நியமிப்பதற்காகவே குறித்த பதவி சிறிலங்கா அதிபரினால் வறிதாக்கப்பட்டுள்ளதாக பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரசியலமைப்பு பேரவையின் 3 சிவில் பிரஜைகளின் எதிர்ப்பினால் சிறிலங்கா அதிபரின் நோக்கம் தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு குறிப்பிட்டார்.
தலைமை கணக்காய்வாளர் பதவி
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “2025.04 ஆம் மாதத்தில் இருந்து தலைமை கணக்காய்வாளர் பதவி வெற்றிடமாகியுள்ளது. இந்த பதவிக்கு கல்வி தகைமை மற்றும் தொழில் தகைமை உள்ள தர்மபால கம்மன்பில என்பவரை நியமிக்குமாறு கணக்காய்வாளர் சங்கம் ஜனாதிபதிக்கு வலியுறுத்தியுள்ள நிலையில், திணைக்களத்தின் இதர அதிகாரிகள் இந்த கோரிக்கைக்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.
தலைமை கணக்காய்வாளர் பதவிக்கு கணக்காய்வாளர் திணைக்களத்தில் பதவி நிலை அடிப்படையில் தர்மபால கம்மன்பில என்பவர் உள்ள நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake ) தனது களனி பல்கலைக்கழக நண்பரை இந்த பதவிக்கு நியமிக்க தீர்மானித்துள்ளார்.
அரசியலமைப்பு பேரவைக்கு தனது நண்பரின் பெயரை சிபாரிசு செய்துள்ளார். ஜனாதிபதியின் சிபாரிசை அரசியலமைப்பின் மூன்று சிவில் பிரஜைகள் எதிர்த்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஜனாதிபதியின் பெயர் முன்மொழிவு நிராகரிக்கப்பட்டது.
களனி பல்கலைக்கழக நண்பர்
மழைக்குகூட கணக்காய்வாளர் திணைக்களத்தின் பக்கம் ஒதுங்காத ஒருவரை பல்கலைக்கழக நண்பர் என்ற காரணத்துக்காக தலைமை கணக்காய்வு அதிபதியாக நியமிக்கும் முயற்சியை அரசியலமைப்பு பேரவையின் 3 சிவில் பிரஜைகள் தோற்கடித்துள்ளார்கள்.
இந்த மூவரின் பதவி காலம் 2026.01.03 ஆம் திகதியுடன் நிறைவடையும் இதன் பின்னர் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே பதில் தலைமை கணக்காய்வாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் செயற்பாடு முறையற்றது. தமது அரசாங்கம் ஊழல் மோசடியற்ற வகையில் செயற்படும் என்று குறிப்பிடும் ஜனாதிபதி ஏன் விடயதானத்துடன் தொடர்பில்லாத ஒருவரை தலைமை கணக்காய்வாளராக நியமிக்க முயற்சிக்க வேண்டும்.
கணக்காய்வு திணைக்களம் சுயாதீனமான முறையில் செயற்பட்டால் தான் ஊழலை இல்லாதொழிக்க முடியும். அரசாங்கத்தின் முறையற்ற போக்கினை நாட்டு மக்கள் அவதானிக்க வேண்டும்“ என தெரிவித்தார்.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

