முகாமிலுள்ள கணனியில் போலி நாணயத்தாளை அச்சிட்ட இராணுவ அதிகாரி கைது
தியத்தலாவ தொண்டர் படை பயிற்சி முகாம் அலுவலகத்தில் கடமைக்காக பயன்படுத்தப்படும் கணனி மற்றும் அச்சு இயந்திரத்தை பயன்படுத்தி போலி நாணயத்தாள் அச்சிடப்பட்டுள்ளதாக தியத்தலாவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தியத்தலாவை மதுபான விற்பனை நிலையமொன்றில் போலி 5000 ரூபா நாணயத்தாளை கொடுத்து மது போத்தல் ஒன்றை கொள்வனவு செய்ய முற்பட்ட இராணுவ வீரர்கள் மூவர் கைது செய்யப்பட்டதையடுத்து நீண்ட விசாரணைகளின் பின்னர் இது தெரியவந்துள்ளது.
முகாமிலுள்ள கணனியில் இருந்து வடிவமைப்பு
இராணுவ முகாம் அலுவலகத்தின் கணனியில் இருந்து போலி நாணயத்தை அச்சடித்த இராணுவ லான்ஸ் கோப்ரல் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதன் பின்னர் நவம்பர் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த விசாரணைக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் போலி நாணயத்தாள் விசாரணை திணைக்களத்தின் உதவியை நாட தியத்தலாவ காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த லான்ஸ் கோப்ரல் கைது செய்யப்பட்டதையடுத்து, தியத்தலாவ காவல்துறையினர், போலிப் பணத்தைக் கடத்திய இராணுவத்தில் நான்கு பேரை கைது செய்துள்ளனர்.
மதுபான கடையில் கொடுத்த இராணுவ வீரர்கள்
நாணயத்தாளை அச்சடித்த லான்ஸ் கோப்ரல் விசாரணைக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், அலுவலகத்தில் உள்ள கணனியை பயன்படுத்தி இரண்டு நாணயத்தாளை மட்டுமே அச்சிட்டதாக கூறினார்.
அந்த நாணயத்தாளில் ஒன்றை கடந்த 15ஆம் திகதி தியத்தலாவில் உள்ள மதுபானக் கடை ஒன்றில் கொடுத்து இரு இராணுவ வீரர்கள் மதுபானம் வாங்க முற்பட்டுள்ளனர்.
குறித்த நாணயத்தாள் தொடர்பில் மதுபானக்கடை முகாமையாளர் காவல்துறையினருக்கு வழங்கிய அறிவித்தலின் பிரகாரம் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டு அதனை சோதனையிட்ட போது அது போலி நாணயத்தாள் என தெரியவந்துள்ளது.