போரில் அங்கவீனமடைந்த இராணுவ வீரர் எரிவாயு வெடித்து மரணம்!
கண்டியில் அங்கவீனமடைந்த இராணுவ வீரர் ஒருவர் எரிவாயு வெடித்து உயிரிழந்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்தச் சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவம் கடந்த ஜூலை 17 ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது.
நான்காவது ஈழப் போரில் மோட்டார் குண்டுத் தாக்குதலுக்குள்ளாகி அங்கவீனமடைந்து, மருத்துவ காரணங்களுக்காக வீட்டில் இருந்து வந்த இராணுவ வீரர் ஒருவர், சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவத்தில் தீக்காயங்களுக்கு உள்ளாகி, ஒரு மாதத்திற்கும் மேலாக கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஓகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
கண்டி மெனிக்ஹின்ன பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான மொரகல்கெதர லசந்த ரஞ்சித் குமார ( 33 வயது) என்ற இராணுவ வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இராணுவ வீரர் உயிரிழந்துள்ளதன் காரணமாக அவரது குடும்பத்தினர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக இராணுவ வீரரின் மனைவி ரோணுகா தஹாநாயக்க தெரிவித்துள்ளார்.
எரிவாயு வெடித்த சம்பவத்தில் இராணுவ வீரரின் தாயும் தீக்காயங்களுக்கு உள்ளாகி, தற்போதும் வீட்டில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்த இராணுவ வீரரின் ஓய்வூதிய கொடுப்பனவுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் கூட இதுவரை நிறைவு செய்யப்படவில்லை என குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.