கோட்டாபயவை உடன் கைது செய்யவும்..! சிங்கப்பூர் அரசிடம் சென்ற 63 பக்க குற்ற அறிக்கை
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் நந்தசேன கோட்டாபய ராஜபக்சவை உடனடியாக கைது செய்யுமாறு சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்ட அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கோட்டாபய மீதுள்ள போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டங்களின் சட்டத்தரணிகள் சங்கம் 63 பக்கங்களைக் கொண்ட அறிக்கையினை சிங்கப்பூர் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளது.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது ஜெனிவா மற்றும் சர்வதேச மனிதவுரிமை சட்டங்களை கோட்டாபய கடுமையாக மீறியதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
குறித்த அறிக்கையில் கோட்டாபய பாதுகாப்பு செயலாளராக இருந்த போது , கொலை, சித்திரவதை, பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் சுதந்திரத்தைப் பறித்தல் மற்றும் உள மற்றும் உடலியல் ரீதியிலான துன்புறுத்தல்களில் கோட்டாபய ஈடுபட்டார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்ட அமைப்பு
சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்ட அமைப்பானது இலங்கை மக்களின் நீதிக்காக பணியாற்றும் ஓர் அமைப்பாகும்.
2013 இல் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்ட அமைப்பானது சிறிலங்காவில் நடைபெறும் சட்டவிரோதமான தடுப்புக்கள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் ஆகியவற்றை விரிவாக விசாரணைசெய்து, ஆவணப்படுத்தும் பிரதான அமைப்பாகத் திகழ்கின்றது.
தென்னாபிரிக்க நிலைமாறு நீதி நிபுணர் யஸ்மின் சூக்கா அவர்களால் இவ்வமைப்பு தலைமை தாங்கப்படுவதுடன், நீதிமன்றங்கள், ஐக்கியநாடுகள் சபை, பிரித்தானியாவின் பாலியல் வன்முறையைத் தடுக்கும் ஆகிய அமைப்புக்களில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர்களை சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்ட அமைப்பு கொண்டுள்ளது.
