பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதான குடும்பஸ்தர் பிணையில் விடுவிப்பு
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த புளியங்கண்டலடி வாகரையைச் சேர்ந்த கு.விஜயதாஸ (வயது - 30) என்ற குடும்பஸ்தர் இன்று(27) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மாவட்ட நீதவான் நீதிமன்றம் வாழைச்சேனையில், நீதிபதி எச்.எம்.எம்.பசில் முன்னிலையில் இவ் வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டபோது நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல நீதி மன்றம் அனுமதி வழங்கியது.
முகப் புத்தகத்தில் அரசினால் தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் உருவம் அடங்கிய புகைப்படத்தினை பதிவிட்டதன் பிரகாரம் இவர் 27.11.2020 ஆம் திகதி வாகரை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மாவட்ட நீதவான் நீதிமன்றம் வாழைச்சேனையில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.
ஒரு பிள்ளையின் தந்தையான இவர் கடந்த ஒரு வருடமும் 2 மாதங்களாக தடுப்புக்காலில் வைக்கப்பட்டிருந்தார். இவர் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் வாகரை காவல் நிலையத்திற்குச் சென்று காலை 9 மணிமுதல் 12 மணிக்குள் கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனையும் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது.
இவ் வழக்கில் சட்டத்தரணிகளான எம்.எச்.எம்.றம்சீன், ஹாலிப் றிபான் ஆகியோர்கள் தொடர்ந்து இவ் வழக்கினை முன்னெடுத்து வந்த நிலையில் சட்டத்தரணி ரி.ஜெயசிங்கம் இவர்களுடன் இணைந்து கொண்டு வழக்கினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.