தொல்லியல் திணைக்கள பெயர்பலகையை அகற்றியவர்கள் கைது செய்யப்படுவார்கள்! அரசாங்கம் திட்டவட்டம்
கோறளைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் தொல்பொருள் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர்ப்பலகைகளை அகற்றியோர் கைது செய்யப்படுவார்கள் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.
இன்றைய (24) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போது சற்றுமுன்னர் அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.
சட்டம் அனைவருக்கும் சமம் என்றும் சட்டத்தை கையிலெடுத்து இந்த செயற்பாட்டில் ஈடுபட்டோர் மீது நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
காவல்துறை விசாரணைகள்
அத்துடன் இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே காவல்துறை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், வடக்கு, கிழக்கு, தெற்கிற்கும் ஒரே சட்டம் தானென்றும் அதனை எவரும் மீறக்கூடாதென்றும் தெரிவித்தார்.

கோறளைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் “தொல்லியல் இடம்“ என்ற பெயர்ப் பலகைகளை அமைக்கப்பட்டிருந்தன.
கிரான் பிரதேசத்தில் குடும்பிமலை உட்பட்ட மலை பிரதேசங்கள், பழமை வாய்ந்த ஆலயங்கள், வயல் வெளிகள் போன்ற இடங்களில் காணப்படும் மக்கள் போக்குவரத்து செய்யும் வீதியில் உள்ள சந்திகளில் இப் பெயர் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இந்தநிலையில், குறித்த சம்பவம் தொடர்பாக பிரதேச மக்கள், சமூக ஆர்வலர்கள், பிரதேச சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகரனிடம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் தவிசாளர், உபதவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் இணைந்து அவற்றினை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |