மினுவங்கொடையில் அதிரடி சோதனை : துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது
மினுவங்கொடை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அதிரடிச் சோதனையில் பாரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய நேற்று (27) முன்னெடுக்கப்பட்ட சோதனையில் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாகக் கருதப்படும் கைத்துப்பாக்கி ஒன்றும், இலங்கையில் பாரிய குற்றச்செயல்களுக்குப் பயன்படுத்தப்படும் T-56 ரக துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.
நீதிமன்றத்தில் முன்னிலை
இந்தச் சம்பவம் தொடர்பாக 43 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் எங்கு தயாரிக்கப்பட்டன மற்றும் இவை வேறு ஏதேனும் குற்றச்செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டனவா என்பது குறித்து மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டு வருவதுடன், இந்த ஆயுதக் கடத்தலின் பின்னணியில் உள்ள ஏனைய நபர்களைக் கண்டறியும் நடவடிக்கைகளையும் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |