அசாத் சாலிக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட சி.ஐ.டி விசாரணை!
மேல் மாகாண முன்னாள் ஆளுநரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலிக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கொரோனா வைரஸினால் உயிரிழப்பவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய ஸ்ரீலங்கா அரசாங்கம் அனுமதியளிக்காவிட்டால் பின்விளைவுகள் ஏற்படும் என அசாத் சாலி விடுத்த எச்சரிக்கையை அடிப்படையாக வைத்து இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கொழும்பில் கடந்த 5ஆம் திகதி ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்த மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, 'உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதித்துள்ள நிலையில் ஸ்ரீலங்கா மட்டுமே அதனை மறுத்து வருவதாகவும் அதற்கான நஷ்ட ஈட்டை அரசாங்கம் செலுத்த வேண்டி வரும் எனவும் தெரிவித்திருந்தார்.
அசாத் சாலியின் இந்த கருத்து தொடர்பில் சட்டத்தரணி ரவீந்திர மனோஜ் குமார பொலிஸ் தலைமையகத்தில் செய்த முறைப்பாட்டுக்கமையவே சி.ஐ.டி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் கொழும்பு பிரதான நீதிவான் மொஹம்மட் மிஹாலிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ள விசாரணையாளர்கள், விசாரணைகளுக்கு தேவையான அசாத் சாலியின் ஊடக சந்திப்பு தொடர்பில் ஊடகங்கள் வெளியிட்ட ஒளிப்பதிவுகளின் செம்மைப்படுத்தப்பட்ட செம்மைப்படுத்தப்படாத பிரதிகளை பெற்றுக்கொள்ளவும் அனுமதி பெற்றுக்கொண்டுள்ளனர்.
சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு அதன் பிரதானி பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் உத்தரவில் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிசாந்த டி சொய்ஸாவின் ஆலோசனைக்கமைய சி.ஐ.டி.யின் விஷேட விசாரணைப் பிரிவு - 3 இன் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் குமாரசிங்கவின் கீழ் செயற்படும் சிறப்புக் குழுவொன்றே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகின்றது.
ஏற்கனவே அசாத் சாலியின் இந்தக் கருத்துக்கு எதிராக தென்னிலங்கையில் இயங்கி வரும் கடும்போக்குவாத பௌத்த அமைப்புக்களும் சிவில் அமைப்புக்களும் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.
அவரைக் கைது செய்யும்படி விமல் வீரவன்ச போன்ற ஒருசில அமைச்சர்களும் அரசாங்கத்தை வலியுறுத்திவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.