பாலச்சந்திரனின் படுகொலையானது ஒரு போர்க்குற்றம்! ஹக்கீமின் கருத்துக்கு ஆளும் தரப்பு பதில்
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் மகன் பாலச்சந்திரனின் மரணம் குறித்து நாடாளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்தி முன்வைக்கப்பட்ட கருத்து குறித்து ஆளும்கட்சி எம்.பி ரியாஸ் பாரூக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இறுதி யுத்தத்தின் போது யார் ஆட்சியில் இருந்தனர்? என்றும், இந்த கொலைக்கு உண்மையில் பொறுப்புகூற வேண்டியவர்கள் யார்? எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
கடந்த நாடாளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் முன்வைத்த கருத்துக்கு இன்று(12.05.2026) பதில் வழங்கும் விதமாக அவர் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஒரு போர்க்குற்றம்
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

“கடந்த நாடாளுமன்ற அமர்வில் ரவூப் ஹக்கீம் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகனின் மரணத்துக்கு நீதி வேண்டும் என்ற கருத்தை முன்வைத்திருந்தார்.
நாடாளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்தி இந்த கருத்தை முன்வைத்தார். இந்த மரணத்தின்போது ஆட்சியில் இருந்தவர்கள் யார், பொறுப்புகூறவேண்டியவர்கள் யார்?,
159 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அன்று ஆட்சியில் இருந்தோமா? ஏன் அவரை ஆட்சியில் இருந்தவர்களும் நாடாளுமன்றில் இருந்தவர்களும் காப்பாற்ற முன்வரவில்லை?
தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் படுகொலையானது ஒரு போர்க்குற்றமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஹக்கீமின் திசைதிருப்பல்
இந்த விடயங்களை அறிந்து குழப்புவதற்காக இவ்வாறான கருத்துக்களை ஹக்கீம் முன்வைக்கின்றார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையின் முக்கிய சாட்சியாளரான அசாத் மௌலானாவின் கருத்துக்களை பொய் என்றும் கூறுகின்றார்.
தற்போது சுரேஸ் சலேவை காப்பாற்ற சில அரசியல்வாதிகள் முனைகின்றனர். கோட்டை தொடருந்து நிலையத்தில் வைத்து சலேவை இஸ்லாமியர் என கூறி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். அவர் இஸ்லாமியராக இருந்தால் என்ன?
சட்டத்தின் முன் தமிழ், சிங்கள, முஸ்லீம் என இன பாகுபாடு இல்லாது எமது ஆட்சி நடைபெறுகிறது. இந்த தாக்குதலுக்கான நீதியை பெற்றுக்கொடுப்பதே எமது அனைத்து சமூகத்துக்குமான சிறந்த தீர்வாக அமையும்” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |