முள்ளிவாய்க்கால் ஏற்பாட்டுக் குழு 'மக்கள் எழுச்சி இயக்கமாக' மாற வேண்டும் - பகிரங்க கோரிக்கை
முள்ளிவாய்க்கால் ஏற்பாட்டுக் குழுவானது இனி வரும் காலங்களில் மக்கள் எழுச்சி இயக்கமாக மாற்றப்பட்டு மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் தொடர்ச்சியாக ஈடுபட வேண்டும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாவதி ஆனந்தநடராஜா (Leelavathi Ananthanadaraja) தெரிவித்தார்.
இன்றையதினம் (22) யாழ். ஊடக அமையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “அண்மையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டிப்பது தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் கூட்டமொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
அழைப்பை ஏற்று நாம் அங்கு சென்றிருந்தோம். அந்தக் கூட்டம் சுமுகமாகவே நடைபெற்றது. அவ்வாறு இருந்தும் கூட தவறான செய்திகள் பரப்பப்பட்டன. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நினைவு கூறுவதில் மட்டுமே ஈடுபடுகின்றனர்.
முள்ளிவாய்க்கால் ஏற்பாட்டுக் குழுவானது இனி வரும் காலங்களில் மக்கள் எழுச்சி இயக்கமாக மாற்றப்பட்டு மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் தொடர்ச்சியாக ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் எமக்குள் இருந்தது. அந்த வகையில் அந்தக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது.
ஆனாலும், அந்தக் கூட்டத்தில் ஒரு சில கருத்து வேறுபாடுகள் கூட்டத்தில் இடம்பெற்றாலும் கூட, அவை வேறுவிதமாக சித்தரிக்கப்பட்டன.
கூட்டத்தில் பங்கு கொண்ட ஒரு சிலரிடையே இடம்பெற்ற தனிப்பட்ட முரண்பாடு காரணமாக சில வாக்குவாதங்கள் இடம்பெற்றது.
ஊடகங்களில் வெளியான அனைத்துச் செய்திகளும் பொய்யானவையே” என்றார்.
