பாலர் பாடசாலைக்குள் ஆயுதத்துடன் நுழைந்து பிஞ்சுகளை கொலை செய்த 18 வயது கொடூரன்! பிரேசிலில் அதிர்ச்சி சம்பவம்
தெற்கு பிரேசிலில் உள்ள பாலர் பாடசாலை ஒன்றில் 18 வயது இளைஞர் ஒருவர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதில் இரண்டு வயதுக்கு குறைவான மூன்று குழந்தைகள் மற்றும் அந்த பாடசாலையின் இரு பணியாளர்களே கொல்லப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அந்த ஆயுதத்தால் தன்னைத் தானே தாக்கிக்கொண்ட சந்தேகநபர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சன்டா கட்டரினா என்ற மாகாணத்தின் சவுடாடஸ் என்ற சிறு நகரில் இடம்பெற்ற இந்த தாக்குதலின் பின்னணி பற்றி தெளிவாகத் தெரியவில்லை.
சம்பவம் இடம்பெறும்போது சிறுவர்கள் பலர் அந்த பாடசாலையில் இருந்த நிலையில் அவர்களை மறைத்து வைப்பதற்கு பணியாளர்கள் முயன்றுள்ளனர்.
இதில் ஒரு சிறுவர் சிறு காயத்திற்கு உள்ளாகியுள்ளார். அந்த பாலர் பாடசாலை வாயிலில் இருந்த ஆசிரியர் ஒருவரை முதலில் தாக்கிய அந்த ஆடவர் வகுப்பறை ஒன்றுக்கு சென்று சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்தி இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.