வசந்த முதலிகேவை தொடர்ந்தும் சிறைவைக்க முயற்சி
அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை தொடர்ந்தும் சிறைவைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி குற்றஞ்சாட்டியுள்ளார்.
உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து இன்று தங்காலை நீதவான் முன்னிலையில் வசந்த முதலிகே முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
வசந்த முதலிகே தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு
இதனையடுத்து வசந்த முதலிகே தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை பரீசிலனைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், அவரை உடனடியாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கடந்த 10 ஆம் திகதி பணித்திருந்தது.
இந்த நிலையில் சுமார் 90 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த வசந்த முதலிகே இன்று தங்காலை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மேலும் தெரிவிக்கையில்,
“இன்று வசந்த முதலிகே, பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இதற்கு முன்னர் உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவின் பேரில் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். எனினும் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அந்த உத்தரவை பின்பற்றினாலும் இன்றுடன் அவர் 86 நாட்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
இன்னும் நான்கு நாட்கள் மாத்திரமே தடுத்துவைப்பதற்கு அவர்களுக்கு அதிகாரம் இருக்கின்றது. அவர் வேறு வழக்குகளில் தொடர்புபட்டுள்ளதால், எதிர்வரும் 18 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மன்றில் தெரிவித்துள்ளனர்.
என்ன வழக்கு மற்றும் எந்த நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளார் என்பது தொடர்பில் நாம் கேள்வி எழுப்பிய போது, அவர்கள் அதற்கு பதிலளித்த காவல்துறை அதிகாரிக்கு அது தொடர்பான விடயங்களை முன்வைக்க முடியாமல் போயுள்ளது.
தெளிவாக இது உச்ச நீதிமன்றத்தில் வழங்கிய உத்தரவை மீறி அவரை, மோசடியான முறையில் புறக்கணித்து மீண்டும் சிறையில் அடைப்பதற்கு அவர்கள் திட்டமிட்டுகின்றனர் என்ற விடயத்தை நாம் மன்றுக்கு சுட்டிக்காட்டினோம்.
இன்றைய வழக்கு விசாரணை தொடர்பான நீதிமன்ற அறிக்கையை பெற்றுக்கொண்டுள்ளோம். அதனை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்க்கின்றோம்" - என்றார்.
வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர் கைது செய்யப்பட்டதை எதிர்த்தும், அவர்களை விடுவிக்குமாறு அல்லது நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.