அமைச்சர் பந்துலவிற்கு கொரோனா - அரசின் உயர்மட்டத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் மத்தியில் அச்சமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் நேற்றைய தினம் நடைபெற்ற கொவிட்−19 தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி கூட்டத்தில் அமைச்சர் பந்துல குணவர்தன பங்கேற்றிருந்தார்.
இந்த கூட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், அமைச்சர் டளஸ் அழகப்பெரும, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோரை சந்தித்ததாக பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். டளஸ் அழகப்பெரும மற்றும் லலித் வீரதுங்க ஆகியோர், பந்துல குணவர்தனவுடன் இணைந்து தேநீர் அருந்தியுள்ளதாக தெரியவருகின்றது. தேநீர் அருந்தும் வேளை அவர்கள் தமது முகக் கவசத்தை அகற்றியதாக அறிய முடிகின்றது. எனினும், சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே முகக் கவசத்தை அப்புறப்படுத்தவில்லை எனவும், தேநீர் அருந்தவில்லை எனவும் தெரிய வருகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டிருந்தனர். சந்திப்பின்போது, பந்துல குணவர்தனவிற்கு அருகில், கெஹெலிய ரம்புக்வெல மற்றும் டளஸ் அழகப்பெரும ஆகியோர் அமர்ந்திருந்தமை, ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்ட படத்தில் உறுதியாகியது.
இந்த நிலையில், சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல ரெபிட் அன்டிஜன் பரிசோதனை செய்துள்ளதாகவும், அவருக்கு தொற்று உறுதியாகவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் பந்துல குணவர்தனவுடன் தேநீர் அருந்திய டளஸ் அழகப்பெரும மற்றும் லலித் வீரதுங்க ஆகியோர் தம்மை சுய தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.