கடும் பொருளாதார நெருக்கடி -சர்வதேச நாணய நிதியத்திடம் சரணடைகிறதா இலங்கை?
நிதியமைச்சர் பசில் ராஜபக்ச எதிர்வரும் ஏப்ரல் மாதம் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக கொழும்பிலுள்ள ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
உயர்மட்ட ஆதாரங்களின்படி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர அமர்வுகள் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளன, இதன் போது நிதியமைச்சர் அந்த நிறுவனங்களின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.
நிதியமைச்சர் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி அதிகாரிகளுடன் ஏற்கனவே உத்தியோகபூர்வமற்ற கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாகவும் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அவர்களின் உதவியை நாடியுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை நிலைநிறுத்துவதற்கான வேலைத்திட்டத்தை சர்வதேச நாணய நிதியம் வகுத்து பொருளாதாரத்தை கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மூலம் மறுசீரமைத்து நிதி சீர்திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கத்தை வழிநடத்தும் என்பதை அரசாங்கம் பெருமளவில் ஏற்றுக்கொள்ளும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
