வெளிநாட்டிலிருந்து வந்து தனிமையில் வசித்த பெண் மர்ம மரணம் - வெளியாகியுள்ள தகவல்!
வாழைச்சேனையில் தனிமையில் வசித்து வந்த பெண் ஒருவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட பெண் பல வருடங்களாக மலேஷியாவில் வசித்து வந்தார் எனவும், அண்மையிலேயே நாட்டிற்கு வந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் காலையிலேயே இவரது சடலம் கண்டுபிடிக்ககப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கல்குடா வீதி வாழைச்சேனையில் அமைந்துள்ள வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்த பெண் ஒருவரின் சடலமே உறவினர்கள் வழங்கிய தகவலின்படி கண்டு பிடித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
4 பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு

கற்குடா வீதி வாழைச்சேனையைச் சேர்ந்த திருமதி பாஸ்கரன் சற்குணதேவி வயது 52 என்ற 4 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 15 நாட்களாக தமது சகோதரியின் தொலைபேசி அழைப்பு துண்டித்து காணப்படுவதாகவும் அவர் தொடர்பான தகவல்கள் எதுவும் தெரியவில்லை ஆகவே அவரைத் தேடும்படி, வவுனியாவில் உள்ள சகோதரி ஒருவர் வாழைச்சேனைப் பிரதேசத்தில் வசிக்கும் தமது உறவினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
அதற்கமைய அவர் இன்று காலை பிரதேச கிராம சேவகருக்கு தகவல் வழங்கியதை அடுத்து காவல்துறையினரின் துணையுடன் அவர் வசித்த வீட்டில் சென்று பார்த்தபோது உயிரிழந்த நிலையில் சடலத்தினை கண்டு பிடித்துள்ளனர்.
நீண்ட காலத்தின் பின்னர் நாட்டிற்கு வந்த பெண்

இவர் கடந்த 10 வருடங்களாக மலேஷியாவில் தொழில் புரிந்து வந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக வாழைச்சேனையில் உள்ள தமது வீட்டில் வசித்து வந்துள்ளார்.
தான் வசித்து வந்த வீட்டினை விற்பனை செய்து விட்டு வவுனியா திரும்பும் நிலையில் வீட்டினை விற்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இவர் இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளமை தமக்கு கவலையளிப்பதாகவும் அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.
காவல்துறை விசாரணை

இதேவேளை சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கணவர் யாழ்ப்பாண பிரதேசத்தில் காவல்துறை உத்தியோகத்தராக கடமையாற்றி வருகின்றார் என்றும் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.


