இளைஞனை பொலிஸார் அடித்துக்கொன்றதாக சந்தேகம்- மட்டக்களப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மட்டக்களப்பு இருதயபுரத்தில் கடந்த 3ம் திகதி சந்திரன் விதுஷன் எனும் இளைஞன் ஐஸ் போதை பொருள் வியாபாரம் செய்வதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சுமார் இரவு 10.45 மணியளவில் கைது செய்யப்பட்ட நிலையில் மறுநாள் காலை சடலமாக மீட்கப்பட்டு இருந்தார்.
சந்திரன் விதுஷன் எனும் இளைஞனின் தங்கை தனது அண்ணனை பொலிஸார் அடித்துக் கொன்றதை நான் என் கண் முன்னே பார்த்தேன் என்று தெரிவித்திருந்தார் . எனது அண்ணனுக்கு நீதி கிடைக்க வேண்டும் அதுவரைக்கு நான் சும்மா விடமாட்டன் எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும் மருத்துவ உடல் கூற்று அறிக்கையில் எனக்கு சந்தேகம் உள்ளது எனவே அதற்கான சரியான நீதி கிடைக்க வேண்டும் கைவிலங்கிட்ட எனது அண்ணன் ஐஸ் போதைப்பொருட்களை எவ்வாறு விழுங்குவான் இவர்கள் அனைத்தையும் மூடி மறைக்க பார்க்கின்றனர் உண்மை ஜெயிக்க வேண்டும் என தெரிவித்திரந்தார்.
இந்நிலையில் இன்று மட்டக்களப்பு நீதிமன்றில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீதிபதி அறையில் நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பொலிஸ் காவலில் இருந்த பொழுது உயிரிழந்த சந்திரன் விதுஷன் மரணம் தொடர்பாக இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் சிரேஷ்ட சட்டத்தரணி சுகாஷ் ஆஜராகி இருந்தார் .
அவர் குறித்த வழக்கு தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்,
விதுஷனின் மரண பரிசோதனை அறிக்கையில் நம்பிக்கை இல்லாத காரணத்தினால் அவர்கள் சார்பில் மேற்கொண்ட விண்ணப்பத்தை அடுத்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு ஒன்றினை எங்களுக்கு வழங்கியிருக்கின்றது.
புதைக்கப்பட்ட விதுஷனின் உடலை மீண்டும் எதிர்வரும் திங்கள் கிழமை தோண்டி எடுத்து இலங்கையிலேயே இத்துறையில் மிகவும் நிபுணத்துவம் வாய்ந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முன்னிலையில் மீளவும் பிரேத பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
இந்த குடும்பத்துக்கு சட்டத்துறை ஊடாக அதிஉச்ச உதவியை வழங்கியதில் நான் பெருமையடைகின்றேன். இதனூடாக பேராசிரியரின் சிபார்சுகள் பிரதானமாக எடுத்துக்கொள்ளப்படும் . கடந்த 3ம் திகதி மட்டக்களப்பில் ஜஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞன் 4 ஜஸ் போதைப் பொருள் பைகளை வாயில் போட்டு விழுங்கியதன் காரணமாக உயிரிழந்துள்ளார் என பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்திருந்தனர் .
இந்த நிலையில் உயிரிழந்தவரின் சடலத்தை நீதவான் பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்ட்டார். அதேவேளை வாழைச்சேனை பொலிஸ் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த தலைமையில் விசேட பொலிஸ் குழு அமைக்கப்பட்டு விசாணையிடம்பெற்று வருகின்றது.
4ம் திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையில் குறித்த நபர் 4 பக்கட்டுக்களை கொண்ட ஜஸ் போதைப் பொருளை வாயில் போட்டு விழுங்கிய நிலையில் அது நெஞ்சுப் பகுதியில் வெடித்ததில் நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.