உரிமையாளர் இல்லாத சந்தர்ப்பத்தில் உடைத்து சேதப்படுத்தப்பட்ட வீடு- கிராம சேவையாளருடன் சென்றவர்களின் அடாவடி!
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் மட்டக்களப்பு திருகோணமலை வட்டவான் சந்தியில் உள்ள காணியில் அமைக்கப்பட்ட வீடு மற்றும் வேலிகளை, அப் பகுதிக்கு கிராம அதிகாரியுடன் சென்றவர்கள் சேதப்படுத்தியமை தொடர்பில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் காணி உரிமையாளர் அயாத்துகலந்தர் பீர் முகம்மது என்பவர் கருத்துத் தெரிவிக்கையில்,
குறித்த காணியை எனது மனைவியின் தந்தையார் 1976ம் ஆண்டு தொடக்கம் பராமரித்து வந்தார். அதன் பிற்பாடு எனக்கு இருப்பதற்கு இடம் இல்லாத நிலையில் 2005ம் ஆண்டு காணியை பராமரிக்கும் வகையில் எனக்கு வழங்கினார். அதன்பிரகாரம் வேளான்மை செய்கையை மேற்கொண்டு காணியினை வேலி அடைத்து பராமரித்து வந்தேன்.
அதன் பின்னர் எனது மாமனார் 2012ம் ஆண்டு உயிரிழந்த நிலையில் வாகரை பிரதேச செயலகத்தினர் அலுவலகத்திற்கு வருகை தருமாறு கோரியதோடு, ஒப்பங்களில் மாற்றம் செய்ய வேண்டும் காணிக்குரிய ஆதாரங்களை வழங்குமாறு கோரினர்.
என்னிடம் உள்ள ஆதாரங்களை வழங்கிய நிலையில் மூன்று ஏக்கர் காணியை ஒரு ஏக்கர் வீதம் மூவருக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறிய நிலையில் எனக்கும், மனைவிக்கும், மகளுக்கும் மாற்றம் செய்யப்பட்டு செயலகத்தில் இருந்து கிராம அதிகாரி, காணி அதிகாரி வருகை தந்து எல்லையை நிர்ணயம் செய்து வழங்கினார்கள்.
அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. சில காலம் கழித்து பிரதேச செயலாளர் என்னை பிரதேச செயலகம் வருகை தருமாறு பணித்திருந்த நிலையில் அங்கு சென்ற வேளை தங்களது காணியில் மேட்டுக் காணியை பெற்றோல் நிலையம் அமைக்க வழங்குமாறு கோரினார். நான் அதற்கு மறுப்பு தெரிவித்தேன். இந்த நிலையில் 2015ம் ஆண்டு இரவோடு இரவாக எனது காணியின் வேலியை பிடுங்கி எறிந்து விட்டனர்.
அதன் பிற்பாடும் நான் தொடர்ச்சியாக இங்கு வீடு அமைத்து விவசாயம் செய்து வந்த நிலையில் நாங்கள் இரண்டு நாட்கள் ஓட்டமாவடியில் உள்ள மகளின் வீட்டிற்கு சென்று வந்த போது வீடு உடைந்து காணப்பட்டது. அயலவர்களிடம் விசாரித்த போது கிராம அதிகாரியுடன் வருகை தந்தவர்கள் வீட்டினை உடைத்தாக அறிந்தேன்.
வீட்டின் உடமைகள், காணியின் வேலி தூண்கள் என்பவற்றை கிராம அதிகாரியுடன் வருகை தந்தவர்கள் சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளனர். நான் வருகை தந்து பார்த்த வேளை அனைத்தும் சேதமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது. நிலைமைகள் தொடர்பில் கேட்ட போது நீதிமன்ற தீர்ப்பின் படி காணி பிரதேச செயலகத்திற்கு உரித்து என்பதால் என்னை காணியை விட்டு எழும்ப வேண்டும் என்று கூறப்பட்டது.
எனவே நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, நீதி அமைச்சர் அலிசப்ரி ஆகியோரிடம் நான் வேண்டிக் கொள்வது எனது காணியினை எனக்கு பெற்று தந்து குறித்த காணியில் நான் விவசாயம் செய்து இங்கு எனது வீட்டில் வசித்து வருவதற்கு தாங்கள் எனக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் காணி உரிமையாளரின் மனைவி கருத்துத் தெரிவிக்கையில்,
நான் பிறந்து வளர்ந்தது இக்காணியில். 1990ம் ஆண்டு திருமணம் செய்து வேறு இடங்களுக்கு சென்ற நிலையில் அகதி முகாமில் ஐந்து வருடங்கள் இருந்து பின்னர் எனது தந்தையார் எனக்கு இந்த காணியை வழங்கினார். அப்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசமாகும் என சீனி முகம்மது மூமினா உம்மா தெரிவித்தார்.
எனது தந்தையார் எங்களுக்கு வழங்கிய நிலையில் நாங்கள் பராமரித்து விவசாயம் செய்து வந்தோம். தொடர்ச்சியாக பல பிரச்சனைகளை சந்தித்து எங்களது ஆவணங்களை காட்டி வாழ்ந்து வந்தோம். இந்த நிலையில் தற்போது எனது மகள் சுகயீனமாக உள்ள நிலையில் அவரிடம் சென்ற வேளை தற்போது ஊரடங்கு காரணமாக நாங்கள் இங்கு வந்து தங்க முடியாத நிலைமை ஏற்பட்டது.
இருந்தும் எனது கணவர் வருகை தந்து பார்ப்பார். எனது மகளை பராமரிக்கும் பணியில் இருந்தமையால் நாங்கள் இங்கு வருகை தராத சமயத்தில் எமது வீட்டினை உடைத்து உடமைகளை கொண்டு சென்றுள்ளனர். எனவே குறித்த விடயம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே எங்களுக்கு நியாயம் கிடைக்க அனைவரும் உதவ வேண்டும் னவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.





