எதிர்காலத்தில் நாட்டின் ஜனாதிபதியாக வரக்கூடியவர் இவரே- ஆரூடம் கூறும் பிள்ளையான் அணி!
எதிர்காலத்தில் இந்த நாட்டின் ஜனாதிபதியாக வரக்கூடியவர் நாமல் ராஜபக்ஸவே என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தையும், கிழக்கு மாகாணத்தையும் வலுவானதாகக் கொண்டு வருவதற்கு அக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் எதிர்காலத்தில் இந்த நாட்டின் தலைவராக வரக்கூடிய ஒரு இளைஞர் நாமல் ராஜபக்ஸ ஆகியோரின் கரங்களைப் பலப்படுத்தி அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமிழர்கள் தலைநிமிர்ந்து தடம் பதிப்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். கிராமிய விளையாட்டு மைதானங்களை மேம்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் புணரமைக்கப்பட்ட கோட்டைக்கல்லாறு கிழக்கு பொது விளையாட்டு மைதானம் நேற்று மாலை இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜகப்ஸவினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
கொரோனா அச்சத்தின் மத்தியிலும். நாட்டில் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், பல்வேறு அச்சத்தின் மத்தியிலும், அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்ற நிலமையிலும், நமது நாடு மாத்திரமல்லாமல் சர்வதேசமே பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்ற நிலையிலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோரின் தலைமைத்துவத்தின் கீழ் நாட்டில் அபிவிருத்திகள் இன்னும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன.
அதன் ஒரு அங்கமாகத்தான் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ மட்டக்களப்பு மவாட்டத்தின் வைத்தியசாலை, விளையாட்டு மைதானங்கள், உள்ளிட்ட பல இடங்களுக்கு விஜயம் செய்து அபிவிருத்தித்திட்டங்களைப் பார்வையிட்டடுள்ளார்.
ஆனால் தொடர்ந்தும் வெறும் வார்த்தைப் பிரயோகங்களைச் சொல்லிக் கொண்டு 62 வருடங்களாக தமிழர்களை எவ்வாறு ஏமாற்றிக் கொண்டிருந்தார்களோ, அதுபோல் எதிர்க்கட்சி அரசியல் செய்பவர்களும், தொடர்ந்து இந்த அரசை விமர்சனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். இந்த இடம் மிகவும் அழகான இடம், இந்த மைதானத்தைச் சுற்றி நடைபாதை அமைத்து தருகின்றேன், சுற்றுலாத்துறையூடாக இதனை வளப்படுத்தித் தருகின்றேன் என அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இதுதான் எமக்குத் தேவை இதுதான் ஒரு நாட்டின் தலைமைத்துவத்துக்கான இலச்சணமாகும். மக்கள் எதனை எதிர்பார்க்கின்றார்களோ அதனைப் பெறுவதற்குரிய தலைமைத்துவத்தைத் தான் நமது நாடு பெற்றிருக்கின்றது. இதனை விமர்சிப்பவர்கள் விமர்சித்துக் கொண்டே இருக்கட்டும், 62 வருடங்களாக விமர்சித்தோம் என்ன நடந்தது.
இன்னும் விளையாடுவதற்கு ஒரு மைதானம் இந்த கோட்டைக்கல்லாற்றில் இல்லாமலுள்ளது, சிறந்த விளையாட்டு மைதானம் இந்த பட்டிருப்பு பிரதேசத்தில் இல்லாமலுள்ளது. இந்த நிலமையை நாங்கள் மாற்ற வேண்டும். எமது தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் சிறையில் இருக்கின்ற போது தான் கோட்டைக்கல்லாறு மைதானத்தின் புணரமைப்புக்கு நிதியை ஒதுக்கீடு செய்திருந்தார்.
இதுபோல் இன்னும் இப்பிரதேசத்தில் இன்னும் பல அபிவிருத்திகளை மேற்கொள்வதற்குரிய காலம் கனிந்துள்ளது .அதற்காக நாங்கள் தயாராக இருக்கின்றோம். எமது பகுதியில் விளையாட்டில் மிகுந்த திறமையான இளைஞர்கள் இருக்கின்றார்கள். அடுத்து போர்க்களத்தில் களமாடிய இளைஞர்கள் தற்போது அவர்களது பொருளாதாரத்திற்காகவும், வாழ்க்கையை வலுவாக்குவதற்காகவும், வறுமையுடன் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.
அவர்களின் எதிர்காலத்தை சுபீட்சமாக மாற்றவேண்டும் எமது மாணவர்களின் கல்வி நிலமையை உயர்த்த வேண்டும். இளைஞர்களின் விளையாட்டுத்துறையை வலுவாக்க வேண்டும். கணவனை இழந்து, வீடுகள், மலசலகூடம் இல்லாமல் பல்வேறு பிரச்சனைகளுடன் வாழ்ந்து வருபவர்களுக்குரிய தேவைகளை நிவர்த்தி செய்யவேண்டியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.