செங்கம்பள வரவேற்பு சர்ச்சையில் சிக்கிய வியாழேந்திரன்- கேள்வி கேட்ட ஊடகவியலாளருக்கு மிரட்டல்!
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட சிறிலங்கா இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தைக்கு செங்கம்பள வரவேற்பு வழங்கப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை சிறிலங்கா இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மறுத்துள்ளார்.
தன்மீது குற்றச்சாட்டை முன்வைப்பவர்கள் அதனை நிருபித்தால் தான் நாளை அதாவது ஊடக சந்திப்பு நடைபெற்று 24 மணி நேரத்தில் பதவி விலக தாயர் என இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் ஊடக சந்திப்பு இன்று காலை அவரது அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
கடந்த சனிக்கிழமை தொடக்கம் முகப்புத்தகங்களிலும் சில இணையத்தளங்களிலும் வந்த செய்திகளை பார்த்து நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் நேற்றைய தினம் ஊடக சந்திப்பில் என்னைப் பற்றிய சில கருத்துக்களை முன்வைத்திருந்தார்.
ஆகவே அதற்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் எனக்கு இருக்கின்றது. கடந்த சனிக்கிழமை கபில அத்துகோரல, இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக ஆகியோர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பொதுஜன பெரமுன கட்சியின் மாவட்ட காரியாலயத்திற்கு வருகைதந்திருந்தார்கள்.
அவர்கள் வருகை தந்ததன் நோக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்பொழுது கிராமங்களிலே முப்பது லட்சம் ரூபாய் நிதி ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளுக்கும் ஒதுக்கப்படுகின்றது வரவிருக்கும் வரவு செலவு திட்டம் தொடர்பான விடையத்தை கட்சி சார்ந்தவர்களுடனும் கலந்துரையாடி கிராம மட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல் மேற்கொள்வதற்கே மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சந்திரகுமாரின் காரியாலயத்திற்கு வருகை தந்திருந்தார்கள்.
இவர்கள் வருகை தந்ததன் பிற்பாடு நானும் இந்த மாவட்டத்தினுடைய இராஜாங்க அமைச்சர் என்றதன் அடிப்படையில் அந்தக் கூட்டத்திலே கலந்து கொண்டேன் நாட்டில் இருக்கின்ற அமைச்சர்கள் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 25 மாவட்டங்களுக்கும் அவர்கள் இவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக கொழும்பு தலைமை காரியாலயத்தில் தீர்மானிக்கப்பட்டு அவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அனுப்புகின்றனர்.
அந்த அடிப்படையிலேயே இவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்திருந்தார்கள். இந்த நிலையில் ஒரு சில குற்றச்சாட்டுகள் என்மீது வைக்கப்படுகின்றன. ஒன்று வியாழேந்திரன் மற்றும் சந்திரகுமாரின் அழைப்பின் பேரில்தான் லொஹான் ரத்வத்த மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்தார். இரண்டாவது அவர் வியாழேந்திரன் சந்திரகுமார் ஆகியோருடன் ஒரு சந்திப்பை நடத்தி விட்டுச் சென்றார், மூன்றாவது லொஹான் ரத்வத்தவுக்கு வியாழேந்திரன் செங்கம்பளம் விரித்து வரவேற்றார் என்ற குற்றச்சாட்டுகளை ஒரு சில முகபுத்தகங்கள் ஊடாகவும் இணைய தளங்கள் ஊடாகவும் வெளியானதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தனது கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார்.
லொஹான் ரத்வத்த உட்பட ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களை நானோ அல்லது சந்திரகுமாரோ தனிப்பட்ட ரீதியாக அழைத்து கூட்டம் நடத்தவில்லை, அடுத்தது எக்காரணம் கொண்டும் செங்கம்பளம் விரிப்பை நான் மேற்கொள்ளவில்லை.
மூன்றாவது அவர் என்னோடும் சந்திரகுமாரோடும் தனிப்பட்ட விதமாக கலந்துரையாடவில்லை கூட்டம் ஆரம்பித்து எல்லோரும் வருகை தந்து அமர்ந்து கடைசியாகத்தான் நான் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டேன் இந்த நிலையில் அவருக்கு எவ்வாறு நான் செங்கம்பளம் விரிக்க முடியும் என்பதனை யோசிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.