பெர்முடா முக்கோணத்தின் திகில் மர்மங்கள்
உலகம் எத்தனையோ மர்மங்களால் மறைந்துள்ளது. இவற்றில் பல விஷயங்கள் இன்றைய நவீன விஞ்ஞானத்தையும், விஞ்ஞானிகளையும் கூட குழப்புவதாக உள்ளன.
தொழில்நுட்பம், அறிவியல் வளர்ச்சி பெற்ற நவீன யுகத்திலும் கூட சில விஷயங்கள், எப்படி நடக்கின்றன என காரணம் சொல்லி விவரிக்க முடியாதவையாக உள்ளது.
அப்படி பல ஆண்டுகளாக பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும் பெர்முடா முக்கோணம் பற்றி அறிந்து கொள்வோம். வடக்கு அமெரிக்காவுக்கு கிழக்கே, பனாமா கால்வாய்க்கு அருகில் அமைந்துள்ளது பெர்முடா தீவு.
பெர்முடா முக்கோணம்
அதை ஒட்டி இருக்கும் மர்மமான பிரதேசத்துக்கு வைக்கப்பட்ட பெயர் தான் பெர்முடா முக்கோணம். இதை சாத்தானின் முக்கோணம் என்றும் மக்கள் அழைக்கிறார்கள்.
அதற்குக் காரணம், அந்தக் கடல் பகுதியில் செல்லும் விமானங்கள், கப்பல்கள் எல்லாம் மாயமாய் மறைந்து போவதுதான்.
பெர்முடா முக்கோணத்தின் அருகே செல்லும் போது திசை காட்டிகள் செயலிழக்கின்றன என்று முதன் முறையாகக் கண்டறிந்து கூறியவர் கொலம்பஸ். அந்தப் பகுதியில் வானத்தில் ஓர் எரிப்பந்தைக் கண்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
அதன்பின் 1872-ம் ஆண்டு ‘மேரி செலஸ்டி’என்கிற கப்பலும், 1918-ம் ஆண்டு ‘யு.எஸ்.எஸ் சைக்ளோப்ஸ்’ என்கிற கப்பலும் சில நூறு பயணிகளுடன் காணாமல் போனது. 1945-ம் ஆண்டு பிளைட் 19 வகையைச் சேர்ந்த 5 ராணுவ விமானங்கள் அந்தப் பகுதியில் பறக்கும்போது காணாமல் போயின.
1949-ல் ஜமைக்கா நாட்டுக்குச் சொந்தமான பயணிகள் விமானம் 39 பயணிகளுடன் மாயமானது. அவர்களை மீட்க அனுப்பிய விமானங்களும் மர்மமான முறையில் மாயமாகின. கேள்வி என்னவென்றால், பெர்முடா முக்கோண மர்மம் உண்மையா அல்லது பொய்யா? அமெரிக்க போர் விமானங்களுக்கு என்ன ஆகின?
நூற்றுக்கணக்கான கப்பல்கள்
பெர்முடா முக்கோணத்தில் உண்மையில் என்ன நடக்கிறது? உலகில் உள்ள வேறு எந்த மர்மமான இடத்தையும் விட இந்த இடம் முக்கியமானதாக இருப்பதற்கு முக்கிய காரணம், ஆபத்தான சூழலில் பல கப்பல்கள் மற்றும் வான் கப்பல்களில் பயணம் செய்த பலரின் மரணம்.
நூற்றுக்கணக்கான கப்பல்கள் மற்றும் விமானங்கள் அங்கு காணாமல் போயுள்ளன மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர்.
இப்படி நூற்றுக்கும் மேற்பட்ட சம்பவங்கள் அந்தப் பகுதியில் நிகழ்ந்ததாகப் பதிவாகி இருப்பதால், அது மர்மப் பிரதேசமாகவே திகழ்கிறது.
அந்தப்பகுதியில் இருந்து தப்பி வந்த புரூஸ் ஹெனன் என்கிற விமானி சொன்ன அனுபவம் தான் பெர்முடா முக்கோணம் பற்றிய ஆராய்ச்சிக்கு விதையாக அமைந்தது. அவர் ஒருமுறை மியாமியிலிருந்து பனாமா கால்வாய் வழியாகத் திரும்பிக் கொண்டு இருந்தார்.
அப்போது தீடீரென்று அவரைச் சுற்றி கருமேகங்கள் சூழ்ந்தது, திசைகாட்டும் கருவி விடாமல் சுற்றிக் கொண்டே இருந்தது. அவரால் திசையைத் தீர்மானிக்க முடியவில்லை. இருப்பினும் தொடர்ந்து விமானத்தை இயக்கியவர், மேகக்கூட்டங்களுக்கு நடுவே ஒரு குகை போன்ற வழியைக் கண்டார்.
16 கிலோமீட்டர் நீளமான அந்தக்குகை போன்ற மேகக்கூட்டத்தை 20 நொடிகளில் கடந்ததாக தனது புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். அதுதான் ஆராய்ச்சியாளர்களை மேலும் சிந்திக்க வைத்தது. சமீபத்தில் பெர்முடா முக்கோணத்துக்குப் பின்னால் இருக்கும் மர்மத்தைக் கண்டுபிடித்து விட்டதாகச் சொல்லி இருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
மர்மப் பிரதேசம்
ஒரு புதிய தியரியை வெளியிட்டு இருக்கிறார்கள். அதன்படி, அந்தப் பகுதியில் நீடிக்கும் அதிகப்படியான காற்றும், பருவநிலை மாற்றங்கள் ஏற்படுத்தும் அழுத்தமும், அறுங்கோண வடிவில் சுழலும் மேகங்கள் 170 மைல் வேகத்தில் ஏற்படுத்தும் காற்று அழுத்தமும்தான் அதற்குக் காரணம் என்று சொல்லி இருக்கிறார்கள்.
அந்தக் காற்றுப்படிமங்கள் கப்பல்களையும், விமானங்களையும் உள்ளிழுத்துக் கொள்ளும் சக்திவாய்ந்ததாக இருப்பதாகக் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
இதுகுறித்து, வானியல் ஆராய்ச்சியாளர் ராண்டி சேர்வெனி குறிப்பிடும்போது, ‘செயற்கைக்கோள்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களில், இந்தக் காற்று வடிவங்கள் மிகவும் வினோதமான வடிவில் இருக்கின்றன. இவை ஏற்படுத்தும் வெடிப்புதான் அழுத்தத்துக்குக் காரணம் என்பது தெளிவாகத் தெரிகிறது’ என்றிருக்கிறார்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
