ரணிலின் கைது சிறிய பிரச்சினை: எம்மை எதுவும் செய்ய முடியாது - பிமல் ரத்நாயக்க எக்காளம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) யூலைக் கலவரம், யாழ். நூலக எரிப்பு போன்ற சம்பங்கள் இடம்பெற்ற காலப்பகுதியிலேயே கைது செய்திருக்க வேண்டும். தற்போது நடந்த விடயம் சிறிய பிரச்சினை தான் என்று நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
வவுனியா (Vavuniya) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ரணில் விக்ரமசிங்கவின் கைது நடவடிக்கையானது ஒரு அரசாங்க பழிவாங்கல் அல்ல.
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி
நாட்டு மக்கள் எமக்கு வழங்கிய ஆணைக்கு அமைய நாங்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையிலேயே அது இடம்பெற்றது.
இதுவரை காலமும் இந்தநாட்டில் சாதாரண மக்களுக்கு மாத்திரமே சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் எமது ஆட்சியில் யார் எவர் என்ற தராதரம் பாராது, அனைவருக்கும் சமமான வகையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
தற்போது இதற்கு எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையில் குப்பைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்துள்ளது. ஆனால் அவர்களால் அரசாங்கத்தை ஒன்றும் செய்ய முடியாது.
தேர்தலில் நின்று வெற்றி பெற முடியாதவர்கள், மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்களே இன்று, ஒன்று சேர்ந்துள்ளனர். ரணிலின் காலத்தில் யாழ் நூலகம் எரியூட்டப்பட்டது, கறுப்பு யூலை கலவரம் இடம்பெற்றது.
பட்டலந்தை அறிக்கை
அந்தக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் வவுனியா, செட்டிகுளம் பகுதிகளிற்கு இடம்பெயர்ந்திருந்தார்கள்.
அத்துடன் பட்டலந்தை அறிக்கை தொடர்பாக அனைவருக்கும் தெரியும். எனவே அந்த காலப்பகுதியில் தான் இவரை கைதுசெய்திருக்க வேண்டும்.
இது சின்ன விடயம் தான். ஆனால் எதிர்காலத்தில் மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி ஊழல் தொடர்பாக மீண்டும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும். அத்துடன் ஊழல்வாதிகள், அரச பணத்தை மோசடிசெய்தவர்கள் மீது தொடர்ச்சியாக சட்டம் பாயும்.
காவல்துறையினர் சுதந்திரமான வகையில் தங்களது கடமைகளை செய்வதற்கான சூழல் தற்போது ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள் அரசு என்ற வகையில் காவல்துறையினருக்கு எந்தவிதமான அழுத்தங்களையும் வழங்கவில்லை என நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 17 மணி நேரம் முன்
