கொழும்பில் உள்ள வாவியொன்றில் உயிரிழக்கும் பறவைகள் : வெளியான காரணம்
கொழும்பில் (Colombo) உள்ள பேர வாவியில் கடந்த சில தினங்களாக விலங்குகள் உயிரிழப்பதற்கான காரணத்தை கொழும்பு மாநகர சபை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பற்றீரியா (bacteria) தொற்றினாலேயே விலங்குகள் உயிரிழப்பதாக பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த விலங்குகளின் திசுக்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் தலைமை கால்நடை மருத்துவர் முகமது இஜாஸ் (Dr. Mohammad Ijaz) தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி வழங்கும் பணிகள்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "கடந்த தினங்களில் வாத்துக்கள் உயிரிழந்தமை தொடர்பில் கொழும்பு நகராட்சி சபை தலையிட்டு, ஹோமாகம கால்நடை புலனாய்வுப் பிரிவுடன் ஒருங்கிணைந்து, உயிரிழந்த வாத்துகளின் உடல் திசுக்களில் பல சோதனைகளை நடத்தியது.
மேலதிகமாக, இரத்த பரிசோதனைகள் மற்றும் மேலும் பல சோதனைகள் செய்யப்பட்ட நிலையில் Pasteurella multocida என்ற பற்றீரியாவால் இந்த பறவைகள் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளோம்.
எனினும், நிலைமையை மேலும் ஆய்வு செய்ய நாங்கள் தொடர்ந்தும் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறோம்.
அத்துடன் மீதமுள்ள விலங்குகளுக்கு நுண்ணுயிர் எதிரி (Antibiotics) தடுப்பூசிகளை வழங்கும் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |