வெளிநாடுகளில் பதுங்கியுள்ள 93 சந்தேகநபர்களுக்கு சிவப்பு அறிவிப்பு : வெளியான அறிவிப்பு
வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள, இலங்கையில் இடம்பெற்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 93 சந்தேகநபர்களை நாட்டிற்கு மீண்டும் அழைத்து வருவதற்காக சர்வதேச காவல்துறையினரின் ஊடாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'நாடே ஒன்றாக'தேசிய திட்டம் குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக இன்று (13) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே காவல்துறை ஊடகப் பேச்சாளர், உதவி காவல்துறை அத்தியாட்சகர் எஃப்.யு. வுட்லர் இதனைத் தெரிவித்தார்.
2024, 2025 மற்றும் இந்த ஆண்டின் கடந்துபோன காலப்பகுதியில் இந்தச் சிவப்பு எச்சரிக்கைகள் மூலம் 38 சந்தேகநபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
காவல்துறை மா அதிபரின் தலையீடு
இதற்கு மேலதிகமாக, காவல்துறை மா அதிபரின் நேரடித் தலையீட்டின் பேரில் மேலும் 35 முக்கிய குற்றவாளிகள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.

இவ்வாறு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபர்களால் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட வாகனங்கள், வீடுகள், தங்கம் மற்றும் காணிகள் உள்ளிட்ட பெரும் அளவிலான சொத்துக்களை அரசுடமையாக்கும் விசேட திட்டமொன்றும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதன்படி, 2024 ஆம் ஆண்டில் 1,490 மில்லியன் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களையும், 2025 ஆம் ஆண்டில் 1,549 மில்லியன் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களையும் அரசாங்கம் பொறுப்பேற்பதன் முதற்கட்டமாக, அந்தச் சொத்துக்களை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், 2026 ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதியில் 839 மில்லியன் ரூபாய் மதிப்பிலான சட்டவிரோத சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான முதற்கட்ட சட்ட நடவடிக்கைகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |