இலங்கையின் சுதந்திர தினம் : யாழ். பல்கலையில் ஏற்றப்பட்ட கறுப்புக்கொடி
இலங்கையின் 78ஆவது சுதந்திர தினமான இன்று (பெப்ரவரி 4) யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
இலங்கை அரசின் சுதந்திர தினம் தமிழ் மக்களுக்கு கரிநாள் என்பதை இலங்கை அரசுக்கு தெரிவிக்கும் முகமாக யாழ் பல்கலைக்கழத்தில் இவ்வாறு கறுப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையின் சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஷ்டிக்கும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கமும் இணைந்து வடக்கு, கிழக்கில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
கரி நாளாக அனுஷ்டிப்பு
அந்தவகையில் வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் காலை 10.00 மணி முதல் இந்த போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.

தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் சிங்கள - பௌத்த மயமாக்கப்படுதல், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி, இறுதிப் போரின்போது நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலைக்கு நீதி, தமிழ் மக்களுக்கான நிலையான அரசியல் தீர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |