பிரித்தானியாவில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற கறுப்பு யூலை 43 ஆம் ஆண்டு நினைவேந்தல்!
1983 கறுப்பு யூலை இனவழிப்பின் 43 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானியாவின் (TGTE) லிவர்பூல் கிளையின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (யூலை 24) லிவர்பூல் லைட்ஹவுஸ் மண்டபத்தில் உணர்வுபூர்வமாக நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.
நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாவீரர் குடும்ப நலத்துறை அமைச்சர் வீரன், பிரதி அமைச்சர் யோகன் ரெட்ணம், உலகத் தமிழர் வரலாற்று வளாகம் மற்றும் லிவர்பூல் தமிழ் சமூகம் சார்பில் சிவகுமார், உலகத் தமிழர் வரலாற்று வளாகத்தைச் சேர்ந்த தயா மற்றும் நா.க.த.அ. லிவர்பூல் கிளை பிராந்திய ஒருங்கிணைப்பாளர் அஜந்தன், நா.க.த.அ லிவர்பூல் வெளிக்கள இணைப்புணர் ஹில்மி லிவர்பூல் தமிழ் சமூகத்தினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
கறுப்பு யூலை 43 ஆம் ஆண்டு நினைவேந்தல்
நிகழ்வினை ஐதுசன் தொகுத்து வழங்க வீரன், யோகன் ரெட்ணம், சிவகுமார், தயா, அஜந்தன், ஹில்மி மற்றும் வளர்மதி ஆகியோர் பொதுவிளக்கேற்றல் நிகழ்வில் பங்கேற்றனர். அத்தோடு யோகன் ரெட்ணம் பிரித்தானியக் கொடியையும் மற்றும் தயா தமிழீழக் கொடியையும் ஏற்றிவைத்தனர்.

வீரன் நினைவேந்தல் சுடர் ஏற்றியதைத் தொடர்ந்து பிரியதர்ஷினி அஜந்தன் அக வணக்கம் நிகழ்த்தினார். அஜந்தன் அறிமுக உரையை வழங்க, சிவகுமார் நினைவேந்தல் மலர் வணக்க நிகழ்வையும் எழுச்சி உரையும் வழங்கினார்.
ரோய் மெர்வின் மரியதாஸ் மற்றும் மோகனா ஆகியோர் நினைவேந்தல் கவிதைகளையும் மற்றும் தருணிக்கா ஆங்கில உரையும் நிகழ்த்தினர். இறுதியில் தனுஷ்காந்த் மற்றும் நிதுர்ஜன் கொடியிறக்க நிகழ்வை மேற்கொண்டதுடன் உறுதிமொழி ஏற்புடன் நிகழ்வு நிறைவுற்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |