இரு வேறு இடங்களில் மீட்கப்பட்ட சடலங்கள்! தீவிர விசாரணையில் காவல்துறையினர்
ஹட்டன் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட சிங்கமலை வன பிரதேசத்தில் உள்ள அணைக்கட்டு பகுதியிலிருந்து ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக ஹட்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 9 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.
அணைக்கட்டு பகுதியில் சடலமொன்று மிதப்பதைக் கண்ட பிரதேசவாசிகள் காவல்துறையினருக்கு தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு விசாரணைகளை மேற்கொண்டதுடன் வைத்திய பரிசோதனைக்காக சடலத்தினை டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மீட்கப்பட்ட ஆண் நீரில் குளிக்கும் பொழுது தவறி விழுந்தாரா அல்லது கொலை செய்யப்பட்ட பின்னர் அணைக்கட்டில் வீசிவிட்டுச் சென்றார்களா என்பது தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மீட்கப்பட்ட சடலம் இதுவரை யாருடையது என அடையாளம் காணப்படவில்லை என்றும் சுமார் 30இற்கும் 35இற்கும் இடையிலான வயது மதிக்கதக்க ஆண் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை வாழைச்சேனை கண்ணகிபுரம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் ஒருவரின் சடலத்தினை மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதேயிடத்தைச் சேர்ந்த சி.சுப்பிரமணியம் (வயது 85) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
முதியவருக்கும் பேத்திக்கும் இடையில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக கோபம் கொண்ட முதியவர் பேத்திக்கு கல்லால் எறிந்துள்ளார். தலையில் காயம் ஏற்பட்ட அவரை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக உறவினர்கள் கொண்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில் பயம் காரணமாக முதியவர் தனது அறையினுள் சென்று கதவை அடைத்துக் கொண்டுள்ளார். நீண்ட நேரமாகியும் முதியவர் வெளியில் வராததால் சந்தேகம் கொண்டு கதவை திறந்து பார்த்த போது அவர் கயிற்றில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.