இந்தியாவில் ஆற்றில் மிதக்கும் பெருமளவான சடலங்கள் - கொரோனா நோயாளிகளது என அச்சம்
இந்தியாவில் கொரோனா தொற்று அதனாலேற்பட்ட எண்ணிலடங்காத மரணங்கள் மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில் பீகார் மாநிலத்தின் ஆறு ஒன்றிலிருந்து பெருமளவான சடலங்கள் மிதந்து வந்துள்ளமை மக்களை மேலும் அச்சத்துக்குள் ஆழ்த்தியுள்ளது.
பீகார் மாநிலம் பக்ஸர் (Buxar) மாவட்டத்தில் சவுசா கிராமத்தில் உள்ள கங்கை நதியிலேயே சடலங்கள் மிதந்து காணப்படுகின்றன. சுமார் 100 சடலங்கள் வீங்கி பெருத்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இவ்வாறு மதிந்து வந்துள்ள சடலங்கள் கொரோனா நோயாளிகளுடையதாக இருக்கலாம் என அதிகாரிகள் நம்புகின்றனர்.இந்த சடலங்களை அடக்கம் செய்யவோ அவ்வது புதைக்கவோ இடம் கிடைக்கவில்லை.
தற்போதைய கொரோனா காலத்தில் சடலங்களை தகனம் செய்ய சுமார், 30 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் ரூபாய் வரை செலவாவதால், ஏழைகள் சடலங்களை கங்கையில் வீசிச் சென்றிருக் லாம் என அந்தப் பகுதியை சேர்ந்த அஸ்வினி சர்மா என்ற வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.கரை ஒதுங்கிய சடலங்களை நாய்கள் தின்பதால், நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அரசு அதிகாரி ஒருவர் கூறும்போது, சடலங்கள் கங்கை கரையில் ஒதுங்கியுள்ளன என்பது உண்மைதான். ஆனால், இப்போது வேறு எதுவும் கூற முடியாது. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார். மற்றொரு அதிகாரி, உத்தரபிரதேசத்தின் எந்தப் பகுதியில் இருந்து இந்த சடலங்கள் வீசப்பட்டன என்பது பற்றி விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
அரசு அதிகாரிகள் குறைவான எண்ணிக்கையிலான சடலங்கள் என்று சொன்னாலும் நூற்றுக்கும் மேற்பட்ட சடலங்கள் கரை ஒதுங்கி கிடப்பதாக அந்தப் பகுதியினர் கூறியுள்ளனர். சடலங்களை உடனடியாக எடுத்து அரசு நிர்வாகம் தகனம் செய்ய வேண்டும் என்றும் அந்தப் பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, பீகாரில் கதிஹார் மருத்துவமனையின் ஊழியர்கள் கொவிட்டால் இறந்தவர்களின் உடல்களை ஆற்றில் கொட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதேவேளை கடந்த சனிக்கிழமை, ஹமீர்பூர் நகரில் உள்ள யமுனா ஆற்றில் பாதியளவில் எரிந்த உடல்கள் மிதந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.